பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

29


ராவ் தீர்மானிப்பார். சில சந்தர்ப்பங்களில் பொதுவாயிருக்கப்பட்ட, வசந்தருதுவின் வர்ணனை, தோட்ட சிருங்காரம், விரகதாபம், மன்மத தூஷணை முதலிய இடங்களிலெல்லாம் பழைய பாட்டுகளை உபயோகிப்பார்கள். மற்ற இடங்களில் தானே, புதிய பாட்டுகள் வர்ணமெட்டுகளுடன் அமைத்துக் கொடுப்பார். இப்பாட்டுகளை மாத்திரம், வேஷதாரிகள் பக்க வாத்தியக்காரர்களுடன் ஒத்திகையில் பழகி வருவார்கள்.

இனி அன்றிரவு நான் கண்ட நபர்களைப் பற்றிச் சிறிது விஸ்தாரமாகக் கூற விரும்புகிறேன். முதலில் அக்கம்பெனியை ஸ்தாபித்தவரும் கம்பெனியின் தலைவருமாயிருந்த கோவிந்த சாமி ராவை எடுத்துக் கொள்கிறேன். இவரை இறந்துபட்ட தமிழ் நாடகங்களை மறுபடியும் உயிர்ப்பித்தவர்களுள் முதன்மையானவராகக் கொள்ள வேண்டும். இவர் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, ஹிந்துஸ்தானி, மஹாராஷ்டிரம் முதலிய பல பாஷைகளில் வல்லவர். அப்பாஷைகளிளெல்லாம் நன்றாய்ப் பேசக்கூடிய சாமர்த்தியம் வாய்ந்தவர். இவர் முதலில் கவர்மெண்ட் உத்தியோகத்தில் இருந்தவர். சுமார் நூறு ரூபாய் சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தனராம். (அக்காலத்தில் நூறு ரூபாய் என்பது தற்காலத்தில் முன்னூறு ரூபாய் வரும்படிக்குச் சமானமெனலாம்.) பூனா தேசத்திலிருந்து, சாங்கிலி கம்பெனியென்று பெயர் கொண்ட மஹாராஷ்ர நாடகக் கம்பெனியொன்று இதற்கு சில வருஷங்களுக்கு முன்பாக, தஞ்சாவூருக்கு வந்ததாம்; அக்கம்பெனியின் நாடகங்களைப் பார்த்து நாடகமாடுவதில் மிகுந்த விருப்பமுடையவராய், அதைப் போன்ற தமிழ் நாடகக் கம்பெனியொன்று ஸ்தாபிக்க வேண்டுமெனத் தீர்மானித்து தஞ்சாவூரிலும் சுற்றுப்பக்கத்திலுமுள்ள தனக்குத் தெரிந்த நாடகமாடுவதில் விருப்பமுடையவர்களும் சங்கீதப் பயிற்சி யுடையவர்களுமான சில சிறுவர்களைத் தனக்குத் துணையாகக் கொண்டு, மேற்சொன்ன “மனமோஹன நாடக கம்பெனி” என்பதை உண்டுபண்ணினார். உடனே, இதற்காகத் தனது காலமெல்லாம் செலவழிக்க வேண்டுமென்று கருதினவராய் தானிருந்த கவர்ன்மெண்ட் உத்தியோகத்தை ராஜினாமா கொடுத்துவிட்டார்! நாடகமாட வேண்டுமென்று அவருக்கு அவ்வளவு. ஊக்கம் இருத்தது போலும்! பிறகு தன் கம்பெனியைச் சேர்ந்த சிறுவர்களுக்கெல்லாம் தமிழ்