பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

நாடக மேடை நினைவுகள்


அச்சமயம் வயது எண்பதுக்குக் குறைந்ததல்ல. மிகவும் வயோதிகராய்த் தடியொன்றை ஊன்றிக் கொண்டு நடப்பாராயினும், தேகவலிமை வாய்ந்தவர். இவர் மேற்கண்ட புஷ்பவல்லி என்னும் நாடகத்துக்குப் பாட்டுகள் எழுதி, ஒத்திகை செய்யும் போதெல்லாம் எங்களுக்கு அப்பாட்டுகளைக் கற்பிப்பார். சாரீரம் அவ்வளவு திவ்யமாயில்லா விட்டாலும், கம்பீரமாயிருக்கும்; சிறுவர்களாகிய எங்கள் குரலைவிட இவர் குரல்தான் ஒத்திகை செய்யும் பொழுது அதிகமாய்க் கேட்கும்! மூன்று நான்கு மணி நேரம் எங்களுடன் தளராது பாடுவார்! அவருக்குப் பின்னால், அவரைக் கிழவர் என்று ஏளனம் செய்தபோதிலும், அவருக்கு அவ்வயதில் அவ்வளவு சக்தி இருந்ததேயென்று இரகசியத்தில் பொறாமைப்படுவோம். அப்படி அவரை ஏளனம் செய்தவர்களில் நானும் இன்னும் ஒன்றிரண்டு பெயர்கள் தவிர, மற்றவர்களெல்லாம் அவருடைய வயதில் பாதிக்கும் முக்காலுக்கும் வராமல் இறந்து விட்டனர்! இப்பொழுது சிலர் கூறுகிறபடி அவர் பழைய காலத்து மண்ணாலானவர். இவ்வளவு இருந்தும் அவரிடத்தில் ஒரு குறைமாத்திரம் இருந்தது. கொஞ்சம் தாகத்திற்குச் சாப்பிடுகிற வழக்கம் உண்டு. அந்தப் பதத்தின் அர்த்தம் அறியாத எனது நண்பர்களுக்கு கொஞ்சம் வெளிப்படையாய்ச் சொல்ல வேண்டும் நான். தாகத்திற்குச் சாப்பிடுவதென்றால் வெறும் தண்ணீ ரைக் குடிப்பதன்று; சாராயம் முதலிய லாகிரி வஸ்துகளை உபயோகிப்பதாம். ஒத்திகை முடிந்தவுடன் தினம், காரியதரிசியாகிய முத்துக்குமாரசாமி செட்டியாரிடமிருந்து கால் ரூபாய் கடனாக வாங்கிக்கொண்டு போய்விடுவார். முதலில் ஏதோ செலவிற்கு வாங்கிக்கொண்டு போகிறார் பாபம் என்று எண்ணியிருந்தேன். சில தினங்களுக்குப் பிறகுதான் அந்தச் செலவு சாராயக்கடையில் செய்யப்பட்டது என்பதை அறிந்தேன்! அறிந்தும் நான் என்ன செய்வது? அவரன்றி பாட்டுகள் எழுதி எங்களுக்குப் பாட்டுகள் கற்பிக்கத் தகுந்தவர்கள் ஒருவரும் அச்சமயம் கிடைக்கவில்லை . இவரைக் கொண்டுதான் மேற்கண்ட புஷ்பவல்லி என்னும் நாடகத்திற்கும், எனது இரண்டாவது நாடகமாகிய “சுந்தரி அல்லது மெய்க்காதல்” என்பதற்கும் பிறகு நான் எழுதிய “கள்வர் தலைவன்” என்னும் நாடகத்திற்கும் பாட்டுகள்