பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

நாடக மேடை நினைவுகள்


ஒன்று, ராஜாவேடம் தரித்த ஒருவர் (அவர் இன்னும் ஜீவந்தராயிருப்பதால் அவர் பெயரை வெளியிட எனக்கு இஷ்டமில்லை) நாடக ஆரம்பத்திற்குச் சில நிமிஷங்களுக்கு முன்தான் தன் வீட்டிலேயே வேஷம் போட்டுக் கொண்டு ஜட்கா வண்டியில் ஏறிக்கொண்டு வந்து சேர்ந்தார்! அவர் முகத்திற் பூசிய வர்ணமானது வியர்வையினால் ஒழுக ஆரம்பித்து மிகவும் ஆபாசமாயிருந்ததென நாங்கள் எல்லாம் நகைத்தோம் என்பதே! போதாக் குறைக்கு, ஒரு காட்சியின் கடைசியில் இவர் பாடவேண்டியிருந்தது. பாடுவதற்காக உடனே ஆரம்பிக்க வேண்டுமென்று எவ்வளவோ சொல்லியும், அன்று அதைக் கவனியாது, பக்கவாத்தியக்காரர்களைப் பார்த்து தலையை அசைக்க ஆரம்பித்தார். அதன் பேரில் திரையை இழுக்க வேண்டி நியமிக்கப்பட்டவர்; திரையை இழுக்கச் சொல்லுகிறார் என எண்ணி, திரையை இழுத்து விட்டார்; அதன் மீது அவருக்கு அடங்காக் கோபம் வந்து திரைக்குப் பின்னிருந்தே தான் பாடவேண்டிய பாட்டைப் பாடி முடித்தார்! இதைச் சொல்லிச் சொல்லி அநேகதரம் நாங்கள் நகைத்துக் கொண்டிருந்தோம். இந்த அங்கத்தினர் எங்கள் மீது மிகவும் கோபம் கொண்டு சீக்கிரத்தில் சபையைவிட்டு நீங்கி விட்டார் பாவம்! இரண்டாவது; எங்களுக்கெல்லாம் முகத்தில் வர்ணம் தீட்ட அக்காலத்தில் பெயர்போன நடராகிய சுப்பராயாச்சாரி என்பவரின் கம்பெனியில், அவருக்கு வேஷம் தீட்டும் அப்பு என்பவன் வந்ததே. இவன் அன்று முதல் ஒன்பது வருஷகாலம் ஒரு நாடகம் தவறாது எங்கள் சபைக்கு ஊழியனாய், மிகந்த சுருசுருப்புடன் உழைத்த வேலையாள். இவனைப்பற்றிச் சில விஷயங்கள் பிறகு கூறவேண்டியிருக்கும் நான்; இவன் நான் அன்று நடித்ததைப் பார்த்து சுப்பராயாச்சாரியைப் போல் நன்றாகப் பெயர் எடுப்பேன் என்று கூறினான். இதை எனக்கு முகஸ்துதியாகக் கூறியிருக்க வேண்டுமென்று நினைக்கிறேன்.

அன்று ஸ்திரீவேஷம் பூண்ட ஜெயராம் நாயகருக்கும் பானுமதி வேஷம் பூண்ட அ. சுப்பிரமணிய ஐயருக்கும், ஜெயராம் நாயகருடைய வீட்டு ஸ்திரீகள், ஸ்திரீவேஷம் தரிப்பித்தனர். சுப்பிரமணிய ஐயர் ஜெயராம் நாயகருடன் சிறுவயது முதல் ஒன்றாய்ப் படித்தவர்; அவர் வீட்டில் உள்ளவர்களுக் கெல்லாம் குழந்தை வயது முதல் நன்றாய்த் தெரிந்தவர்.