பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/655

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



640

நாடக மேடை நினைவுகள்



ஆயினும் எனக்கு நடிப்பதற்கு மிகவும் கஷ்டத்தைக் கொடுத்த காட்சி நான் கௌதமராக போதி விருட்சத்தின் அடியில் ஏறக்குறைய முக்கால் மணி நேரம் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டி வந்த காட்சியே! இந்த முக்கால் மணி நேரமும் மௌனமாய் அசையாதபடி உட்கார்ந்திருப்பதுதான் எனக்கு மிகவும் கஷ்டமாயிருந்தது. அதுவும் கண்களை மூடிக்கொண்டிருப்பதென்றாலும் ஒரு வகையாக இருந்து விடலாம்; நான் கண்களைத் திறந்து கொண்டிருக்க வேண்டி வந்தது! சும்மா உட்கார்ந்து கொண்டிருப்பது ஒரு கஷ்டமா என்று இதை வாசிக்கும் எனது இளைய நண்பர்கள் கேட்கலாம். பத்து நிமிஷம் அசையாது உட்கார்ந்து பாருங்கள்; பிறகு இந்தக் கேள்விக்கு நீங்களே பதில் சொல்லி விடுவீர்கள் என்று, அவர்களுக்கு நான் பதில் உரைப்பேன். நாடக மேடையின் பேரில் நான்கைந்து மணி சாவகாசம் நடிப்பதைவிட, நாற்பது நிமிஷம் சும்மா உட்கார்ந்து கொண்டிருப்பது மிகவும் கடினமாம் என்பதற்குச் சந்தேகமேயில்லை . இவ்வாறு நான் “சும்மா” உட்கார்ந்து கொண்டிருந்ததில் மற்றொரு விபரீதமான கஷ்டமொன்று நேர்ந்தது. தான் எனது ஆசனத்தில் உட்கார்ந்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம் எனது துடையில் ஏதோ ஒரு பூச்சி (அந்த ஆசனத்திலிருந்த மூட்டைப் பூச்சியாயிருக்கலாம் என்று நினைக்கிறேன்) என்னைக் கடிக்க ஆரம்பித்தது! நான் அதை அகற்றுவ தென்றால் எனது கைகால்களை அசைக்க வேண்டும். அப்படிச் செய்வேனாயின் காட்சி கெட்டுப்போகும். இந்த தர்மசங்கடத்தில் அது கடிக்கும் தினவைப் பொறுத்துக் கொண்டேயிருந்தேன், அந்த முக்கால் மணி நேரமும்! இதை நினைத்துக்கொண்டால் இதைப் படிப்பவர்களுக்கு வருவது போல் எனக்கும் சிரிப்பு வருகிறது; ஆயினும் அப்பொழுது எனக்குச் சிரிப்பாயில்லை.

எனது நண்பர் இந் நாடகத்தில் யசோதையாக நடித்ததும், பாடியதும், மாயா யசோதையாக நர்த்தனம் செய்ததும் மிகவும் நன்றாயிருந்ததெனப் பலரும் மெச்சினர். இவருடைய சிறு குமாரன் ‘மணி’ என்பவன் ராகுலனாக அழகாய் நடித்தான்.