பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/659

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



644

நாடக மேடை நினைவுகள்


கடைசியாக இவ் வருஷம் மரித்த எங்கள் சபையின் அங்கத்தினருள், என் மனைவியாகிய தனம்மாளையும் நான் குறிக்கவேண்டும். எங்கள் சபையில் ஸ்திரீகளை அங்கத்தினராகச் சேர்த்துக் கொள்ளத் தீர்மானித்த நாள் முதல், என் மனைவி அவர்களுள் ஒருத்தியாய்ச் சேர்ந்து, தன் ஆயுள் பரியந்தம் ஏறக்குறைய ஒரு நாடகமாவது தவறாமல் பார்த்து வந்தனள். சபையின் மற்றொரு லேடி மெம்பராகிய பண்டிதை விசாலாட்சி அம்மாள், என் மனைவியைப்பற்றி ஒரு முறை கூறியது எனக்கு இப்பொழுது ஞாபகம் வருகிறது. அதாவது, “மற்ற லேடி மெம்பர்களெல்லாம், என் கணவன் அப்படி நடிக்கின்றார், என் தமயன் அப்படி நடிக்கிறார், என் தகப்பனார் அப்படி நடிக்கிறார் என்று சும்மா பேசிக்கொண்டிருக்கிறார்கள்; நீ ஒருத்திதான், உன் புருஷன் நடிப்பதைப் பற்றிப் புகழ்ந்து பேசாது மௌனமாயிருக்கின்றவள்!” என்று புகழ்ந்ததேயாம். முப்பத்தாறு வருடங்கள் என் இல்லறத் துணைவியாயிருந்த எனது பத்தினியை இவ்வருஷம் இழக்கும்படியாக ஈசன் எனக்கு விதித்தார். தனது பெண்ணுக்கும் பிள்ளைக்கும் கலியாணம் செய்து பார்த்துவிட்டு, பேத்தி ஒன்றையும் கண்டு கண் குளிர்ந்த பிறகு அதிகச் சிரமமில்லாமல், சுமங்கிலியாக, இறைவன் தன் பதம் சேர்த்துக் கொண்டது அவள் பாக்கியமென என் மனத்தை ஒருவாறு தேற்றிக் கொள்கிறேன்.

இவ் வருஷம் எங்கள் சபையின் பிரதம அங்கத்தினராயிருக்கும் த. ஜெயராம நாயகருடைய உருவப் படமும், அ. கிருஷ்ணசாமி ஐயருடைய உருவப் படமும் அவர்கள் எங்கள் சபைக்கு உழைத்ததற்கு ஒரு சிறு கைம்மாறாகத் திறந்து வைக்கப்பட்டன.

இவ் வருஷ நிகழ்ச்சிகளுள் முக்கியமானது, பல வருடங்களாகப் பிரயத்தனப்பட்டும் இதுவரையில் பூர்த்தியாகாமற் போன ‘பிரதாப ருத்ரீயம்’ என்னும் தெலுங்கு நாடகத்தை ஆடியதே. இது காலஞ் சென்ற வேதம் வெங்கட்ராயலு சாஸ்திரி அவர்கள் எழுதிய நாடகங்களுள் மிகச் சிறந்த தென்பது என் அபிப்பிராயம். இது ஆடுவதற்கும் ஒரு கஷ்டமான நாடகம். இதில் முக்கியமாக யௌகந்தரராகிய மந்திரி வேடமும், வண்ணான் வேடமும் மிகவும்