பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/689

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



674

நாடக மேடை நினைவுகள்


பரமசிவத்திற்கும் ஒரு பொருள்படும்படியான இப்பெயர்கள் இருப்பது இங்கு கவனிக்கத்தக்கது), எனக்கு இன்னருள் பாலித்தார் என்று என் மனத்திடை வழுத்தினேன். இம் மாதிரியாக ஏதோ என் சிற்றறிவைக் கொண்டு தமிழில் சில நாடகங்கள் எழுதினதால், நான் பல இடங்களில், என்னை முன்பின் அறியாதவர்களால் பன்முறை கௌரவப்படுத்தப் பட்டிருக்கிறேன். தமிழில் நாடகங்கள் எழுதினால், நமக்கு ஒரு லாபமும் கிடைக்கவில்லையே என்று எப்பொழுதாவது ஏங்கும் ஸ்திதியிலிருக்கும் எனது இளைய நண்பர்கள், மேற்குறித்த நிகழ்ச்சியைக் கவனித்து, எவ்வளவு கஷ்டம் நேர்ந்தபோதிலும், தங்கள் ஊக்கம் குன்றாது உழைத்து வருவார்களென நம்பி இதை இங்கு எழுதலானேன்.

இவ்வருடம் கிறிஸ்ட்மஸ் (Christmas) விடுமுறையில் எங்கள் சபை நாடகங்களை நடத்தினபொழுது, எனது அத்யந்த நண்பர் கே. நாகரத்தினம் ஐயர் சென்னைக்கு வந்திருந்தபடியால், நாங்கள் இருவருமாக “தாசிபெண்”, “வள்ளி மணம்” என்னும் இரண்டு நாடகங்களிலும் ஆடினோம்.


ஐந்தாம் பாகம் முற்றிற்று