பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய 94 நாடகங்களில் முதன் முதலாக அச்சிடப்பட்ட நாடகம் ‘லீலாவதி - சுலோசனா’ ஆகும். இந் நாடகம் 1895ஆம் ஆண்டு சனவரித் திங்களில் வெளிவந்தது. இந்நாடக நூலுக்குப் பம்மல் சம்பந்தனாரின் உயர்நிலைப் பள்ளி ஆசிரியரான முருகேச முதலியார், மாநிலக் கல்லூரித் தமிழாசிரியர் கிருஷ்ணமாச்சாரி, கிருத்துவக் கல்லூரித் தமிழாசிரியர் பரிதிமாற்கலைஞர், பூவை கல்யாணசுந்தர முதலியார், திருமயிலை வித்துவான் சண்முகம் பிள்ளை, தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையர், தமிழ்ச்சுவடி பதிப்புத் துறையின் முன்னோடிகளில் ஒருவரான சி.வை. தாமோதரம் பிள்ளை, மனோன்மணீயம் நாடக ஆசிரியர் சுந்தரம் பிள்ளை முதலியோர் சாற்றுக் கவிகள் வழங்கியுள்ளனர்.

பம்மல் சம்பந்தனார் எழுதிய இராமலிங்க சுவாமிகள், விசுவாமித்திரர் எனும் இரு நாடகங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்று நாடக ஆய்வாளர் முனைவர் ஏ.என். பெருமாள் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றை இதிகாச, புராண நாடகங்கள் என்றும் வரலாற்று நாடகங்கள் என்றும் சமூக நாடகங்கள் என்றும் மொழிபெயர்ப்பு நாடகங்கள் என்றும் பிரிக்கலாம். இந்நாடகங்கள் சுகுண விலாச சபாவில் அரங்கேறின.

சுகுண விலாச சபா நடத்திய அனைத்து நாடகங்களிலும் பம்மல் சம்பந்த முதலியார் நடித்துள்ளார். மனோகரா நாடகத்தில் மனோகரனாகவும், பின்னர்ப் புருடோத்தமனாகவும் நடித்துள்ளார். ‘சபாபதி’ நாடகத்தில் சபாபதி முதலியாராகவும் அவருடைய பணியாளராகவும் நடித்துள்ளார்.

மேலும் ‘சிறுத்தொண்டர்’ நாடகத்தில் சித்திரபுத்திரனாகவும் ‘காலவ ரிஷி’ என்ற நாடகத்தில் நாரதராகவும் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். மேலும் பெண் வேடம் புனைந்தும் நடித்துள்ளார்.

நாடகத்தில் பெரிய பாத்திரங்களில் மட்டுமன்றி இங்ஙனம் சிறிய பாத்திரங்களில் நடித்ததால் அவர் மேலும் புகழ் பெற்றார். நாடகத்தில் தலைவனாக நடித்தவர்கள் மற்றச் சிறிய பாத்திரங்கள் ஏற்று நடிக்க முன்வர மாட்டார்கள் என்ற கருத்தை முறியடித்தார்.

‘இரண்டு நண்பர்கள்’ எனும் நாடகத்தில் சுந்தராதித்யனுக்கு இறுதியில் பைத்தியம் பிடித்துவிடுகிறது. அப்பாத்திரத்தை ஏற்று நடிக்க பம்மல் சம்பந்தனார், மன நோயாளிகளின் செயல்களை இரு திங்கள் மருத்துவமனையில் இருந்து நுணுகி அறிந்த பின்பு அவ்வேடத்தில் நடித்தார்.

சேக்சுபியரின் 'ஹேம்லட்' நாடகத்தில் நடிப்பதற்கு முன்னர் அந்நாடகத்தில் ஆங்கிலத்தில் நடித்த எட்மண்ட் கீன், எட்வின் பூத், கெம்பிள் ஆகியோர் நடிப்பைக் கூர்ந்து ஆராய்ந்து அதன் பின்னரே அப்பாத்திரத்தில் நடித்தார்.