பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இவ்வாறு தனித்தனியாக வெளிவந்த ஆறு தொகுதிகளையும் ஒன்றாகத் தொகுத்து வெளியிட வேண்டும் என்பது நாடக ஆர்வலர்களின் விருப்பம். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் முகத்தான் ஆறு தொகுதிகளையும் ஒரே நூலாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறது.

பம்மல் சம்பந்த முதலியார், நாடகக் கலையை வளர்ப்பதை வாழ்வின் நோக்கமாகக் கொண்டார். தன்னுடைய வாழ்க்கையை நாடகத்திற்காக அர்ப்பணித்தவர். அவருடைய நாடக வாழ்க்கை , மகிழ்ச்சியான அனுபவங்களையும் கசப்பான உண்மைகளையும் கொண்டது.

‘நாடக மேடை நினைவுகள்’ என்னும் இந்நூலில் அவருடைய நாடக மேடை அனுபவங்களை நமக்கு எடுத்துக் காட்டுகிறார். நாடகக் கலையை முன்னெடுத்துச் சொல்லும் வகையில் அவர் இந் நூலை எழுதியுள்ளார். அவருடைய 94 நாடகங்களையும் மேடை ஏற்றுகின்ற போது அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை இந்நூலில் விளக்கியுள்ளார்.

பம்மல் சம்பந்தனார் இளம் வயதில் தமிழ் நாடகங்களை வெறுத்தார். ‘அரிச்சந்திரா’ என்ற நாடகத்தைப் பார்க்க அவருடைய நண்பர் அழைத்தபோது அவர் மறுத்தார்.

1891ஆம் ஆண்டு பெல்லாரியில் இருந்து கிருஷ்ணமாச்சார்லு என்ற புகழ் பெற்ற தெலுங்கு நடிகர் ‘சரச விநோதினி சபா’ என்ற நாடகக் குழுவுடன் சென்னைக்கு வந்து தெலுங்கு நாடகங்களை மேடையேற்றினார். அந்நாடகங்களைக் கண்ணுற்ற பம்மல் சம்பந்தனார் தமிழிலும் அவை போன்ற நாடகங்களை நடத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டார். கிருஷ்ணமாச்சார்லு நடத்திய நாடகங்களில் ஒன்று ‘ஸ்திரீ சாகசம்’ என்பதாகும். இந்நாடகத்தைப் பம்மல் சம்பந்தனார் ‘புஷ்பவல்லி’ என்ற பெயரில் மொழிபெயர்த்தார். ‘சரச விநோதினி சபா’ என்ற அந் நாடகக் குழுவில் கற்றவர்களும், உயர் பதவியில் உள்ளவர்களும், அரசு அலுவலர்களும் பங்கேற்றிருந்தனர். அதே போன்ற நாடகக் குழுவைச் சென்னையில் அமைக்க வேண்டும் என்று பம்மல் சம்பந்தனார் விரும்பினார். அதன் விளைவாக 1-7-1891ஆம் ஆண்டு ‘சுகுண விலாச சபை’ என்ற நாடகக் குழுவை உருவாக்கினார். அக்குழுவில் பம்மல் சம்பந்தானாரும் ஊ. முத்துக்குமார சாமி செட்டியார், வி. வெங்கடகிருஷ்ண நாயுடு, அ. வெங்கடகிருஷ்ண பிள்ளை , த. செயராம் நாயகர், ஜி.இ. சம்பந்து செட்டியார், சுப்பிரமணிய பிள்ளை ஆகிய எழுவர் இடம் பெற்றிருந்தனர். பம்மல் சம்பந்தனார் ‘புஷ்பவல்லி’ என்ற நாடகத்தைத் தொடக்கத்தில் எழுதி இருந்தாலும் சுகுண விலாச சபையின் சார்பாக முதலில் அரங்கேறிய நாடகம் ‘சுந்தரி’ ஆகும்.

பம்மல் சம்பந்தனார் சுகுண விலாச சபையை நிறுவியதுடன் அந் நாடகக் குழுவுக்கு நிதி ஆதாரம் கேட்டு, சென்னையில் புகழ்பெற்ற செல்வந்தர்களை நாடிச் சென்றார். அவர்களுள் ஒருவர் திவான்பகதூர்