பக்கம்:நான்மணிகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20 நான்மணிகள்

மையினால் அழகுபெற்று விளங்கும் கண்கள்; நெய்யினால் சுடர்விட்டு எரியும் விளக்குகள்: மேகம் முழங்குவதால் தளிர்க்கும் குருக்கத்தி; மேலோர் வழங்குவதால் பெருகும் நற்பொருள்கள். (36)

நகைச்சுவைப் பேச்சு நண்பர்களுக்கு மகிழ்ச்சி தரும்: செல்வத்தை வழங்குவது ஏழைகளுக்கு மகிழ்ச்சி தரும்; மனைவியின் வழிபாடு கணவனுக்கு மகிழ்ச்சி தரும்; இசையின் நுணுக்கம் அறிஞர்களுக்கு மகிழ்ச்சி தரும். (37)

இரப்பவரைக் கண்டு முகம் கவிழ்தல் கரப்பவரது தொழில்; ஈகைக் குணமுடைய செல்வரைச் சேர்தல் இரப்பவரது தொழில்; பரபரப்புள்ள சேனையைச் சேர்தல் வீரரது தொழில்; ஊன் உண்பதை வெறுப்பது இரக்கமுள்ளவர் தொழில். (38)

கண்ணாற் கண்டவைகளைச் செய்து காட்டுவர் கம்மாளர்; காதாற் கேட்டவைகளைச் செய்து காட்டுவர் தொழிலறிஞர்; எல்லோருக்கும் நல்லதைச் செய்து முடிப்பவர் சான்றோர்; எண்ணியவற்றைச் செய்து முடிப்பவர் சினமற்றோர். (39)

ஒழுக்கம் தவறிய மக்களிடத்துச் செல்வம் தங்காது; உயிர் கொண்டு செல்லும் கூற்று உளறுவதைக் கேளாது; எதை மறைத்தாலும் காமத்தை மறைக்க இயலாது; எவர் முயன்றாலும் ஒரு நல்ல நாடு அழியாது. (40)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்மணிகள்.pdf/22&oldid=1355054" இலிருந்து மீள்விக்கப்பட்டது