பக்கம்:நான் கண்ட நாடகக் கலைஞர்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

தியேட்டரில் ஏறக்குறைய மூன்று மாதம்வரை எனது மனோகரா நாடகத்தையும் ரத்னாவளி நாடகத்தையும் கோர்வையாக நடத்தியிருக்கிறார். இம்மாதிரியாக வேறெந்த நாடகக் கம்பெனியும் இடைவிடாது மாதக் கணக்காக நடத்தியதில்லை. அச்சமயங்களில் நான் இவர் நடித்ததை நேரில் பார்த்து புகழ்ந்திருக்கிறேன். முக்கியமாக இவர் மனேஹரன் பாத்திரத்தில் நடித்தது மிகவும் நன்றாக இருந்தது. அதை தினம் தினம் நடிப்பதென்றால் மிகவும் கடினமான வேலையாம். நான் இந்த மனோகரன் பாத்திரத்தை அநேகர் நடித்ததைப் பார்த்திருக்கிறேன், அவர்களுள் இவர் நடித்ததும் எனது மற்றொரு நண்பர் திரு. T. K. ஷண்முகம் அவர்கள் நடித்ததும் தான் எனக்கு மிகுந்த திருப்திகரமாயிருந்தது. அதற்கொரு முக்கியமான காரணம் அவர்கள் அவ்வேடம் தரித்தபோது பதினெட்டு வயதுடைய பால்யனாகத் தோன்றியதாம். மற்றொரு காரணம் இவர்கள் இருவரும் நான் எழுதியதில் ஒன்றையும் மாற்றாமல் அப்படியே நடித்ததாகும்.

இவர் நமது நாட்டைவிட்டு சிங்கப்பூர், மலேயா முதலிய இடங்களுக்குப்போய் அங்கு தமிழ் நாடகங்களின் பெருமையையும் அருமையையும் பரவச் செய்துள்ளார். ஒருமுறை அவ்வூர்களில் ஒன்றில் சாயங்கால நாடகமாக மனோகராவை ஐந்து மணிமுதல் 8-மணி வரையில் ஆடி முடித்தபோது அதைப் பார்க்க அண்டை அயலிலுள்ள ஆயிரக்கணக்கான ஜனங்கள் வந்திருக்கின்றனர் என்று அறிந்து அவர்களைத் திருப்தி செய்வதற்காக அன்றிரவே 9-மணிக்குமேல் 12-மணிவரையில் நாடகத்தை நடத்தியதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன், இவர் சென்னை சட்டசபையில் ஓர் அங்கத்தினராக சில வருடங்கள் இருந்தார் என்பது போற்றத்தக்கது. இன்னும் பல்லாண்டு வாழ்ந்து நமது நாட்டிற்கும் தமிழ் நாட்டிற்கும் ஈசன் கருணை யால் சேவை செய்வாராக.

திரு. T. R. ராமச்சந்திரன்

சென்னை மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் ஒரு குடியானவர் இருந்தார், அவருக்கு ஒரு பிள்ளை. அப்பிள்ளையின் பெயர் ராமச்சந்திரன், அந்த பிள்ளையை ஐந்து வயதானவுடன் ஒரு பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினார். அவன் சரியாக பள்ளிக் கூடத்திற்குப் போவதுமில்லை. சரியாக படிப்பதுமில்லை. அவன் விளையாட்டிலும் வினோதத்திலுமே காலங்கழித்தால் படிப்பு எப்படி வரும்? தகப்பனார் அவனைக் கண்டித்துப் பார்த்தார்,