26
இந்த அம்மாளும் ஒரு நாடகக் கம்பெனியை முற்காலத்தில் நடத்தினார்கள். இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் பாலாம்பாள் ஸ்திரீயாய் இருந்தபோதிலும் எனது 'மனோகரன்' நாடகத்தில் மனோகரனாக நடித்தார். காலஞ்சென்ற கந்தசாமி முதலியார் இவர்களுக்கு மனோகரனாக நடிக்கக் கற்பித்ததாக நான் அறிந்தேன். இந்த ஒரு கம்பெனி எனது மனோகரன் நாடகத்தை அறுபத்தொன்பது முறை நடத்தியதாக கந்தசாமி முதலியார் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். இன்னும் இரண்டு மூன்று பெண்மணிகள் எனது மனோகரன் நாடகத்தில் மனோகரனாக நடித்ததைப் பார்த்திருக்கிறேன். ஆயினும் பாலாம்பாள் நடித்ததுதான் எனக்குக் கொஞ்சம் திருப்திகரமாயிருந்தது. இந்த கம்பெனியும் கொஞ்சம் வருடங்கள் தான் இருந்து கலைந்து போய்விட்டது.
இவர்கள் கணிகை குலத்தவர்கள், சிறு வயதிலேயே தன் ஜாதித் தொழிலுடன் நாடகமாடுவதற்கு ஆரம்பித்தார்கள். இவர்கள். கம்பெனியில் எல்லோரும் ஸ்திரீகளே, இவர்களுடைய அக்காள் முக்கிய ஆண் வேடங்களும் பாலாமணி முக்கிய ஸ்திரீ வேடங்களும் தரித்து நடிப்பார்கள். இவர்கள் ஆடிய முக்கிய நாடகங்கள் டம்பாச்சாரி விலாசம், தாராச்சாங்கம், குலேபகாவலி முதலியவைகளாம். கொஞ்ச காலம் கந்தசாமி முதலியார் இவர்கள் கம்பெனியில் நாடகமாட கற்பிக்கும் உபாத்தியாயராக சேர்ந்தார். அச்சமயம் எனது லீலாவதி சுலோசனா முதலிய நாடகங்களை பாலாமணி ஆடி வந்தார். கொஞ்சகாலம் கோவிந்தசாமி ராவ் அவர்களும் இக்கம்பெனியில் சூத்திர தாராக சேர்ந்திருந்தார். என் அனுமதியின் மீது சென்னையில் ஒருமுறை பாலாமணி லீலாவதி சலோசனாவில் நடித்தபோது என்னை நேரில் வந்து அழைக்க நான் போய் பார்த்தது ஞாபகமிருக்கிறது. நாடகம் சுமாராய் தான் இருந்தது. ஆயினும் பாலாமணி சுலோசனாவாகவும் அந்த அம்மாளில் மூன்றில் ஒரு பங்கு இல்லாத ஒரு பெண் சுலோசனாவின் அக்காளாகிய லீலாவதியாக நடித்தது எனக்குப் பிடிக்கவில்லை. இந்த நாடகத்திற்கும் இவர்கள் நடித்த ராமாயண நாடகத்திற்கும் சித்தாந்த சரபம் முத்துசாமி கவிராயர் நல்ல பாட்டுகளை எழுதிக்கொடுத்தார். சில வருடங்கட்குப்