பக்கம்:நான் கண்ட நாடகக் கலைஞர்கள்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

இவருக்கு இங்கிலீஷ், மஹாராஷ்டிரம் என்னும் இரண்டு பாஷைகளுமன்றி தமிழ், தெலுங்கு, ஹிந்துஸ்தானி பாஷைகளிலும் நன்றாய்ப் பேசவரும் ஆயினும் மனமோகன நாடகக் கம்பெனியின் நாடகங்களை தமிழ் பாஷையிலேயே ஆடவேண்டுமென்று தீர்மானித்தார். இவருடன் சேர்ந்த மஹாராஷ்டிர வாலிபர்களும் தஞ்சாவூர் வாசிகள் ஆனபடியால் தமிழ் நன்றாய் பேசவரும், முதன் முதலில் தஞ்சாவூரில் பூனா சாங்கிலி கம்பெனியார் நடத்திய சில புராணக் கதைகளையே, தமிழில் தனது நடிகர்களுக்கு கற்பித்து அந்த நாடகங்களை தஞ்சாவூரில் ஒரு கொட்டகையில் ஆடி பெயர் பெற்றார். நல்ல பணமும் வசூலாயிற்று. அதன் பேரில் தனது கம்பெனியுடன் சென்னைக்கு வந்து, தான் தஞ்சாவூரில் ஆடிய நாடகங்களையும் ராமாயண பாரதக் கதைகளிலிருந்து எடுத்த சில நாடகங்களையும் ஆடினார்.

இவர் சென்னையில் ஆடியது செங்காங்கடையில் தற்காலம் இருக்கும் சினிமா கட்டிடத்தில் அச்சமயம் இருந்த ஒரு ஓட்டுக் கொட்டகையிலாம். நல்ல மாதிரியில் பழைய ஆபாசங்கள் ஏதுமின்றி இவர் தமிழ் நாடகங்களை நடத்துகிறார் எனும் பெயர் சீக்கிரம் பட்டணம் எங்கும் பரவலாயிற்று. ஜனங்களும் ஏராளமாக இவரது நாடகங்களைப் பார்க்கலாயினர். அக்காலம் முதலில் சனிக்கிழமைதோறும் ஆட ஆரம்பித்து பிறகு ஜனங்களின் நன்மதிப்பைப் பெறவே செவ்வாய்க்கிழமை வியாழக்கிழமைகளிலும் நாடகம் நடத்தினர். சனிக்கிழமை நாடகங்களுக்கு சில சமயங்களில் இரவு 8-30 மணிக்குமேல் டிக்கட்டுகள் கிடைக்காமலும் போவதுண்டு. ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை சென்னைக்கு வந்து இவ்வாறு தமிழ் நாடகங்களை நடத்திப் பெயர்பெற்றார். முன்சொன்னபடி இவர் செங்காங்கடை கொட்டகையிற் ஸ்திரீ சாகஸம் என்னும் ஓர் நாடகத்தை நடத்தியபோது எனது நாடகமேடை நினைவுகளில் கூறியபடி என் தகப்பனார் என்னை இதைப்பார்க்க அழைத்துக்கொண்டு போனார். அன்றியும் நாடகம் முடிந்ததும் கோவிந்தசாமிராவுக்கு என்னை அறிமுகப் படுத்தினார். அதுமுதல் கோவிந்தசாமி ராவ் ஆயுள் பரியந்தம் எனது நண்பராக இருந்தார். சென்னைக்கு வரும்போதெல்லாம் என்னைத் தவறாமல் பார்ப்பார். இதுவரை அவரைப்பற்றி நான் கூறியுள்ள பல விஷயங்களை அவர் வாயிலாகவே அறிந்தேன்.


அவர் பெரிய உருவமுடையவர். பரந்தமுகம், விசாலமான கண்களையுடையவர், கம்பீரமான குரலுடன் பேசும் சக்தி