பக்கம்:நான் கண்ட நாடகக் கலைஞர்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53

திரு. P. D. சம்பந்தம்

இவரை நான் முதன் முதல் பார்த்தது ஜகன்னாத ஐயர் பாய்ஸ் கம்பெனியில். அது முதல் இவர் சாதாரணமாக ஹாஸ்ய பாகங்களையே ஆடி வந்தார். இவர் நடித்த முக்கிய பாகங்கள் ரத்னாவளியில் பப்பரவாயன், மனோகராவில் வசந்தன், சபாபதி நாடகங்களில் சாதாரணமாக வேலைக்கார சபாபதி முதலிய பாகங்களாம். பிறகு சினிமாவில் அனேக சில்லரை வேடங்கள் தரித்திருக்கிறார், இவருடைய முக்கியமான நற்குணம் என்னவென்றால் தன் உடல் நலத்தை எப்பொழுதும் ஜாக்கிரதையாக பார்த்துக் கொண்டிருப்பதேயாம். இப்பொழுது நடுவயதிற்கு மேற்பட்டவராயினும் இன்னும் சினிமாவில் அடிக்கடி நடித்து வருகிறார். நான் முக்கியமாக இவரைப் பற்றி எழுத வேண்டியது ஒன்றுளது. சுகுண விலாச சபை நாடகங்களை மிகவும் கவனமாய் பார்த்ததினாலேயோ அல்லது கந்தசாமி முதலியார் அவருக்கு கற்பித்ததினாலேயோ எனது நாடகங்களில் எல்லா பாகங்களை மற்றவர்களுக்கு கற்பிப்பதில் நிபுணராயிருக்கிறார். யாராவது எனது நாடகங்களை மேடையிலோ அல்லது பேசும்படத்திலோ ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டால் அதில் யார் யார் எப்படி நடிக்க வேண்டுமென்று அறியவேண்டுமாயின் P. D. சம்பந்தத்தை போய் கேட்டுக் கொள்ளுங்கள் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இவர் இன்னும் பல்லாண்டு திடகாத்திரனாய் வாழ்வாராக.

திரு. சாரங்கபாணி

இவரும் மேற்சொன்ன P. D, சம்பந்தத்தை போல் ஜகன்னாத ஐயர் பாய்ஸ் கம்பெனியில் சிறு வயதில் ஆடியவர். முதன் முதலில் அக்கம்பெனியில் காட்சிக்கும் காட்சிக்கும் இடைநேரம் ஏதாவது வந்தால் அச்சமயங்களில் 'மீன் பாட்டு' 'கத்திரிக்காய் கூடை கொண்டாடி' முதலிய பாட்டுகளை இவர் பாடி வந்தது நன்றாய் ஞாபகமிருக்கிறது. இவரிடத்திலிருந்த முக்கிய குணம் என்னவென்றால் தனக்கு ஹாஸ்ய பாகங்கள் தான் பொறுத்தமானவை மற்ற பெரிய பாகங்களை எடுத்துக் கொள்வதில்லை என்று தீர்மானித்தது. ஆதிமுதல் இதுவரையில் ஹாஸ்ய பாகங்களையே மேற்கொண்டு நடித்து வருவதாம். எனது 'சபாபதி முதல் பாகத்தில் தமிழ் வாத்தியாராக இவர் பன்முறை நடித்ததை நான் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.