பக்கம்:நான் கண்ட நாடகக் கலைஞர்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

இவர் நடுவயத்திற்கு மேலாகியும் இன்னும் சினிமாவில் நடித்து வருகிறார். இவரிடம் நான் மெச்ச வேண்டிய குணம் என்ன வென்றால், பணம் சம்பாதித்த பல நடிகர்களைப் போல் பணத்தை விரயம் செய்து தேக நலத்தையும் கெடுத்துக் கொண்டு ஏழைகள் ஆனதைப் போலல்லாமல் தன் உடம்பையும் சம்பாதித்த பணத்தையும் வைத்தும் கொண்டு ஜாக்கிரதையாய் வாழ்ந்து வருவதேயாம். இவர் இன்னும் பல்லாண்டு மேடை நாடகங்களிலும் பேசும் படங்களிலும் நடித்து தமிழ் நாடக அன்னைக்கு தொண்டு செய்து வருவாராக.

இது வரையில் நான் எழுதியதை அச்சிட அனுப்பிய போது இதை படித்த சில நண்பர்கள் "இதென்ன சம்பந்தம் — உங்கள் சுகுண விலாச சபையின் மிகச் சிறந்த நடிகர்களான அ. கிருஷ்ணசாமி ஐயர், C. ரங்க வடிவேலு, S. பத்மநாபராவ் முதலிய மிகச்சிறந்த நடிகர்களைப் பற்றி என் ஒன்றும் எழுதாது விட்டீர்" என்று என்னை கேட்டனர். அதே கேள்வி இதைப் படிக்கும் பல நாடக அபிமானிகளுக்கும் மனதில் பட்டிருக்கலாம். இக்கேள்விக்கு நான் தக்க பதில் சொல்ல வேண்டியவனாய் கடமைப் பட்டிருக்கிறேன். இதற்கு முக்கிய காரணம் அம் மூவர்களைப் பற்றியும் இன்னும் சுகுண விலாச சபையில் என்னுடன் நடித்த சில நண்பர்களைப்பற்றியும் மதுரை டிரமாடிக் சங்கத்தில் என்னுடன் நடித்த சில நடிகர்களைப் பற்றியும் எழுதாதற்குக் காரணம் அவர்களையெல்லாம் பற்றி விவரமாய் "நாடக மேடை நினைவுகள்" என்னும் என் நூலில் எழுதியிருக்கிறேன். ஆகவே அதையெல்லாம் பெயர்த்து இந் நூலில் எழுதுவது அநாவசியம் என்று எழுதவில்லை, அவர்களையெல்லாம் பற்றி இதைப் படிக்கும் எனது நண்பர்கள் யாராவது அறிய வேண்டுமென்றால் அந்நூலில் நான் எழுதி யுள்ளதை படித்துக் கொள்ள வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்.

இச்சிறு நூலை இத்துடன் முடிக்கின்றேன், ஈசன் கருணையால் தமிழ் நாடகம் வாழ்க. தமிழ் நடிகர்கள் வாழ்க.