பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நான் கண்ட பெரியவர்கள் ♦ 5


சீனிவாச சாஸ்திரியார் அவர்களும் இப்பெரியோர் பட்டியலில் இடம் பெறுபவர் ஆவர். ‘சித்து’ என்ற பெயரில் யட்சிணி வித்தைகள் செய்கின்ற இக்காலச் சமயவாதிகள்போல் அல்லாமல், அட்டமா சித்திகளையும் போகிற போக்கில் செய்த யாழ்ப்பாணம் யோக சுவாமிகளும் இப்பட்டியலில் இடம்பெறுபவரே ஆவர்.

முடிவாகக் கூறவேண்டுமேயானால்– சிந்தையை அடக்கி, சிவனருளை முழுதாகப் பெற்ற இவர்கள் ஆண்டியாகவும் திரியலாம்; அரசராகவும் இருக்கலாம்.

இந்த முன்னுரையோடு என்னுடைய சிறிய அனுபவத்தில் திருவருட் பயனால் நான் கண்ட பெரியவர்கள் சிலரைப்பற்றி ஒரளவு கூறலாம் என்று எண்ணுகிறேன். இங்கு நான் சொல்லியுள்ளவை என்னுடைய சிறிய அனுபவத்தில் நேரிடையாக அவர்களைச் சந்தித்துப் பழகியபோது நடைபெற்றவை யாகும். இந்த அருமைப்பாடுகளைக் கண்டு, கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது என்பதைத் தவிர, அவர்கள் பக்கத்தில் செல்லக்கூட எனக்குத் தகுதியில்லை என்பதை முற்கூட்டியே இங்குச் சொல்லிவிடுகிறேன்.

இங்குக் கூறப்பெற்ற பெரியவர்கள் மிகப் பெரிய வாழ்க்கை வாழ்ந்து, சமுதாயத்திற்குப் பெருந்தொண்டு செய்தவர்கள். அப்பெருமக்களிடம் நான் பழகிக் கண்ட ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளைமட்டுமே இங்குக் குறித்துள்ளேன். இவற்றை மட்டும் வைத்துக்கொண்டு அந்த மாமனிதர்களை எடைபோட்டுவிட யாரும் முயலவேண்டா. அவர்களின் மிகமிகச் சிறிய பகுதியையே இங்குக் குறித்துள்ளேன் ஆதலின், இதுதான், இவ்வளவுதான் அவர்கள் என்று தயைகூர்ந்து நினைத்துவிட வேண்டா.