பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


25. சித்தர் யோக சுவாமிகள் [1]


இந்த நாட்டைப் பொறுத்தவரை பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாகச் சராசரி மனிதரிலும் பன்மடங்கு உயர்ந்துநின்ற மகாத்மாக்கள் பலருண்டு. ஒரு சிலர் தம் பாடல்கள் மூலம் தாம் யாரென்பதை உலகிற்கு அறிவுறுத்தியுள்ளார்கள். திருமூலர், பாம்பாட்டிச் சித்தர், சிவவாக்கியர் போன்றவர்கள் தம் பாடல்கள்மூலம் மக்கள் சமுதாயத்திற்கு வழி காட்டியவர்கள் ஆவார்கள். இதன் எதிராக வேறு பல சித்தர்கள் தாங்கள் வாழ்கின்ற காலத்தில் தம்மை வந்தடையும் மக்களின் குறைகளைப் போக்கி நல்வாழ்வு வாழ வழி செய்தவர்கள் ஆவார்கள்.

யாழ்ப்பாணத்தில் நீண்டகாலம் வாழ்ந்து 1975 வாக்கில் வீடுபேறடைந்தவர் தவத்திரு யோகசுவாமிகள் ஆவார். இவர் ஒரு தனிப்பட்ட இடத்தில், சிறிய குடிசையொன்றை அமைத்துக்கொண்டு அதனுள் இருந்துவந்தார். அந்தக் குடிசைக்குள் நுழைய வேண்டுமானால் யாராக இருந்தாலும் குனிந்து இடுப்பை வளைத்துக்கொண்டுதான் உள்ளே செல்லமுடியும். மீண்டும் வெளியே செல்வதும் இதே முறையில்தான். அந்த நாட்டை ஆண்ட பிரதம மந்திரி முதல் ஆங்கிலேயர்வரை மிகப் பலர் சுவாமிகளிடம் அளவிலாத அன்பு பூண்டு வாழ்ந்தனர். சிங்களவர், இஸ்லாமியர், தமிழர், ஆங்கிலேயர்கள் என்ற எந்த


  1. இக்கட்டுரை என்னுடைய ‘அருளாளர்கள்’ என்ற நூலில் முன்னரே இடம்பெற்றுள்ளது.