பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தர் யோக சுவாமிகள் ♦ 191



ஏறத்தாழ இருபது தடவைகளுக்குமேல் சுவாமிகளைத் தரிசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் நான்கைந்து நாட்கள் யாழ்ப்பாணத்தில் இருப்பேன். ஆதலால் அன்றன்று என் சொற்பொழிவு முடிந்தவுடன் அந்த மகானின் சந்நிதிக்குச் சென்று அரைமணியோ ஒரு மணியோ அவரின் திருவடிக்கீழ் அமர்ந்து அவரின் அருளைப் பெறும் வாய்ப்புப் பெற்றிருந்தேன். அவற்றைத் தொகுத்துக் கூறுவதானால் ஒரு நூலாகவே ஆகிவிடும். எனவே, நான்கு நிகழ்ச்சிகளைமட்டும் அடியேன் தருகிறேன். இப்பெருமகனார் எல்லாம் வல்ல சித்தர் என்பதை நிரூபிக்க இந்நிகழ்ச்சிகள் துணைபுரியும் என்று நம்புகிறேன்.

ஒருமுறை திருவாளர் ஸ்ரீகாந்தா என்பவர் யாழ்ப்பாணத்தில் கலெக்டராகப் பணிபுரிந்து வந்தார். அவரும் அவர் மனைவியாரும் சுவாமிகளிடம் பெரும்பக்தி கொண்டவர்கள். அவர்களுடன் தங்கியிருந்த நானும் சுவாமிகளைப்பற்றி அவர்களிடம் பேசிக் கொண்டிருப்பதில் பெருமகிழ்ச்சி அடைவேன். ஒரு முறை கதிர்காமத்தில் ஆடிவேல் விழா நடைபெறுகின்ற சமயமாக இருந்தது. திருவாளர் ஸ்ரீகாந்தா எங்கிருந்தாலும் ஆடிவேலுக்குக் கதிர்காமம் செல்வது வழக்கம். ஆனால், இம்முறை ஊரைவிட்டுப் போகக் கூடாதென்று அரசு ஆணை பிறப்பித்தத்தால் போக முடியவில்லையென்று வருந்தினார். நெருங்கிய நண்பராகிய அவர், “அ.ச. ஐயா! யோக சுவாமிகள் தவறாமல் ஆடிவேலுக்குக் கதிர்காமம் போய்விடுவார்கள். இந்த ஆண்டும் போயிருப்பார்கள். நமக்கோ போகமுடியவில்லை. சுவாமிகள் தங்கி இருக்கும் குடிலுக்குச் சென்று அவர்கள் அமரும் பீடத்திற்கு ஒரு கும்பிடு போட்டு வரலாம் வாருங்கள்” என்றார். அதை ஏற்றுக்கொண்டு நான் புறப்படத் தயாரானேன். நானே காரை ஓட்டவும் ஏற்றுக்கொண்டேன். முதல் இருக்கையில் ஸ்ரீகாந்தாவும் நானுமிருக்க, பின் இருக்கையில் திருமதி