பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200 ♦ நான் கண்ட பெரியவர்கள்


மலாய்நாட்டு ஓய்வூதியம் பெறும் முருகப்பு என்பவர் வீட்டில் தங்கியிருந்தேன். பகல் முழுவதும் வேலையில்லை ஆதலாலும், இரவில் சொற்பொழிவு தொடங்குவதாலும் அன்பர்கள் சிலர் எனக்காக ஒரு காரைக் கொடுத்து பகலில் எங்கு வேண்டுமானாலும் போய் வர ஏற்பாடு செய்தார்கள். முதல் நாள் சொற்பொழிவு முடிந்து வழக்கம்போல் சுவாமிகளிடம் சென்று வணங்கி வழிபட்டு இரவு மீண்டுவிட்டேன்.

மறுநாள் பொழுது விடிந்தவுடன் பல்தேய்த்துக் கொண்டு நின்றேன். நண்பர் முருகப்பு வாலாயமாகக் கேட்கின்ற “நன்கு உறங்கினர்களோ ஐயா” என்ற கேள்வியைக் கேட்டார். அவருக்குப் பதில்கூறத் தொடங்கினேன். ஆனால், வாயிலிருந்து ஒரு சொல்லும் வரவில்லை; காற்றுத்தான் வெளிவந்தது. எவ்வளவு முயன்றும் ஒரு எழுத்தைக்கூட உச்சரிக்க முடியவில்லை. அதிர்ந்து போன நான், என்ன செய்வது என்றறியாமல் திகைத்தேன். ஒன்பது மணியளவில் காரை நானே ஓட்டிக் கொண்டு சென்று சாவகச் சேரியில் ஓய்வு பெற்றிருந்த தொண்டை, காது, மூக்குநோய் நிபுணர் மருத்துவரைக் காணச்சென்று, என் குறையை அவரிடம் எழுதிக் காட்டினேன். அவர் சோதனை செய்துவிட்டு “இன்று மாலை உங்களுடன் ஒருவரை அனுப்புகிறேன். கொழும்பில் சென்று சில சோதனைகள் நடத்திய பிறகு மருத்துவம் செய்யலாம்” என்று கூறினார். அவரிடம் எழுதிக் காட்டும் பொழுது Paralysis of Vocal chord என்று எழுதிக் காட்டினேன். அவருடைய வாக்கை ஏற்றுக்கொண்டு மாலை கொழும்பு போவதற்குத் தயாராகக் காரில் ஏறி அமர்ந்தேன். கண்ணிர் மாலை மாலையாக வந்தது. காரணம் என் பிழைப்பே வாயின் மூலம்தான் நடைபெற்றது. கல்லூரிப் பேராசிரியர், தொடர்ந்து சொற்பொழிவு செய்பவர் என்ற இரண்டும் போய்விட்டனவே! என்னுடைய பெரிய குடும்பம்