பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204 ♦ நான் கண்ட பெரியவர்கள்


சுவாமிகள் செய்கிறார்கள் என்பதை தழுதழுத்த குரலில் கூறிவிட்டு, என்னை அங்கேயே தங்கி ‘மதிய உணவு உட்கொண்ட பிறகு போகலாம்’ என்றும் பணித்தார்கள்.

அன்று மாலை வழக்கம்போல் பேசினேன். பின்னர் சுவாமிகளிடம் சென்று ஆசிபெற்றேன். ஏனைய ஒன்பது நாட்களும் இதே முறையில் சுவாமிகளைச் சென்று தரிசனம் செய்துவந்தேன். இந்த நிகழ்ச்சி நடைபெற்ற காலத்தில் கம்பனைப்பற்றி “இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்” என்ற நூலையும், “நாடும் மன்னனும்” என்ற நூலையும் எழுதி வெளியிட்டிருந்தேன். அதன் பிறகு ஏறத்தாழ முப்பது நூல்கள் எழுதியுள்ளேன். என்றாலும் சுவாமிகளின் வாக்குப் பொய்க்கவில்லை. இந்நூல்களில் முக்கால் பங்கிற்கு மேல் கம்பனையும் சேக்கிழாரையும் பற்றிய நூல்களே ஆகும். இவற்றோடு இல்லாமல் எஸ்.ராஜம் அவர்கள் வெளியிட்ட கம்பராமாயண மூலத்திற்கு ஆசிரியர் குழுவில் ஒருவனாக இருந்தேன். அடுத்துச் சென்னைக் கம்பன் கழகம் வெளியிட்ட “கம்ப இராமாயணம்” பதிப்பிற்குப் பல்கலைச் செல்வர் தெ.பொ.மீ. அவர்களுடன் சேர்ந்து பணியாற்றினேன். 1993 முதல் கோவைக் கம்பன் கழகம் வெளியிடும் இராமாயண நூலுக்கும் முதன்மைப் பதிப்பாசிரியனாக இருந்துவருகின்றேன். தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக இருந்த முனைவர் வி.ஐ. சுப்பிரமணியம் அவர்கள் எதிர்பாராத விதமாக என்னை அழைத்துச் சேக்கிழாரைப்பற்றிய விரிவான நூலொன்றை எழுதுமாறு பணித்தார்கள். மூன்று ஆண்டுகள் பல்கலைக்கழகத்தின் ஏற்புப் பணியாக “பெரியபுராணம் ஓர் ஆய்வு” என்ற பெரியதொரு நூலை எழுதி முடித்தேன்.

1996ல் என்னுடைய எண்பதாவது வயது நிறைவு நாளில் இராமனைப் பற்றிப் புதிய கோணத்தில் ஒரு நூல் எழுதுமாறு “தான சூர கர்ணன்” திரு.ஆர்துரைசாமி நாயுடு அவர்கள் (கோவை) பணித்தார்கள். “இராமன் பன்முக