பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208 ♦ நான் கண்ட பெரியவர்கள்


இருந்தது. “பார்த்தாயா மகனே வேண்டுமானதைச் சாப்பிட்டுவிட்டு மேலே போகலாம்” என்றார், அந்தச் சித்த புருஷர். இருவரும் உண்டுவிட்டு மேலே சென்றோம். மீண்டு வரும்பொழுதும் அதே டீக் கடையில் மறுமுறையும் சாப்பிட்டுவிட்டு டீ குடித்துவிட்டுக் கீழே வந்துவிட்டோம். இதுவரையில் இல்லாத பெட்டிக்கடை அங்கே எப்படி வந்திருக்கும்? அவ்வளவு பலகாரங்கள் அங்கிருந்தும் எங்களைத் தவிர வேறு யாரும் அங்கில்லையே, அக்கடைக்காரன் யாரை நம்பி இவ்வளவு பலகாரங்களையும், கடையையும் வைத்திருக்கிறான் என்ற எண்ணம் என் மனத்தை உலுப்பிக்கொண்டிருந்தது. சுவாமிகள் சிரித்ததைக் கொண்டே “மகனே, இந்த இடியப்பத்தையும் சொதியையும் சுமந்து செல்லவேண்டிய வேலையே இல்லாமல் போய்விட்டது பார்த்தாயா?” என்றார்கள். சுவாமிகளைக் கொண்டுபோய் யாழ்ப்பாணத்தில் விட்டுவிட்டுக் கொழும்பு மீண்ட எனக்கு மனத்தில் அமைதி ஏற்படவில்லை. இரண்டு நாட்கள் கழித்து உற்ற நண்பர் ஒருவரை அழைத்துக்கொண்டு சிவனடி பாதம் போய்ச் சேர்ந்தேன். நண்பரிடம் இதைப்பற்றி ஒன்றும் நான் சொல்லவில்லை. டீக் கடை இருந்த இடத்தின் அடையாளம் நன்கு தெரிந்து வைத்திருந்தேன். அப்படி ஒரு கடை அங்கிருந்த சுவடுகூடத் தெரியவில்லை. நான் சுற்றுமுற்றும் பார்ப்பதைப் பார்த்த நண்பர் ‘என்ன பார்க்கிறீர்கள்?’ என்று சொல்லிக் கேட்டார். ‘இங்கு ஒரு டீக் கடை இருந்ததாக ஞாபகம். அதனால்தான் அது எங்கே போய்விட்டது என்று தேடுகிறேன்’ என்றேன். நண்பர் சிரித்துவிட்டு, ‘இந்த இடத்தில் டீக் கடையா? முழுப் பைத்தியமாக இருந்தால்கூட இந்த இடத்தில் டீக் கடையைத் தேடமாட்டாய். மனித நடமாட்டமே இல்லாத இந்த இடத்தில் எந்தப் பைத்தியக்காரன் டீக் கடை வைப்பான்? வா போகலாம்’ என்று அழைத்துப் போனார். அந்த நண்பரிடம் நடந்தது எதனையும் நான்