விபுலானந்த அடிகள் ♦ 49
நாவலர் அவர்கள் என் கருத்தை ஏற்றுக்கொண்டு இக்கலித்தொகைப் பாடலுக்குப் புதிய உரை விளக்கம் எழுதித்தருமாறு சொல்லி, அதைக் பல்கலைக்கழகச் சஞ்சிகையில் வெளியிடுமாறு செய்தார். நாவலர் பாரதியார் அவர்களின் பரந்த மனப்பான்மைக்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். பிறர் கருத்தை மதிப்பது என்பது ஒன்று; அது சரியெனப்பட்டால் தம் கருத்தையே மாற்றிக் கொள்கிறேன் என்று துணிந்து பேசுதல் என்பது ஈடிணையற்ற பண்பாடாகும்.
நான் பல்கலைக் கழகத்தில் சேருமுன்பே தமிழ்த் துறைக்கு தலைமையேற்றிருந்த விபுலானந்த அடிகள் தம் பதவியை உதறிவிட்டு வெளியேறிவிட்டார். ஆனால், பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு முன்பே அடிகளாரிடம் என் தந்தையாருக்கும் எனக்கும் நெருங்கிய பழக்கம் இருந்து வந்தது.
இலங்கையில் பிறந்த இப்பெருமகனார் துறவு பூண்டு இராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்திருந்தார். அம்மடத்தின் வேண்டுகோளின்படி இமயமலையை அடுத்துள்ள ‘அல்மோரா’ என்ற பனிப்பிரதேசத்தில் மிக நீண்ட காலம் இருக்க நேரிட்டமையின் உடல்நலம் பாதிக்கப்பட்டார். பிறகு தமிழகம் மீண்டு, சிலகாலம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார். கருத்து வேறுபாடு காரணமாக அப்பதவியை உதறிவிட்டார்.
பல்கலைக்கழகத்தில் இருக்கும்போதுதான் இசைக் கல்லூரியோடு பெரிதும் தொடர்பு கொண்டு பழந் தமிழருடைய யாழ் பற்றிய ஆராய்ச்சியைத் தொடங்கினார். என்னுடைய கல்லூரித் தோழரும், நடமாடும் அகத்தியர்