பக்கம்:நாயகர் பெருமான்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

அவன் எழுதுகோலினால் மனிதனுக்குக் கற்றுக் கொடுத்தான். மனிதனுக்குத் தெரியாத பொருள்களை யெல்லாம் அவனே விளக்கி யருளினான்” என்னும் கருத்துள்ள அரபி மொழிச் சொற்களை அவ்வானவர் கூறியருளினார்.

இம்மொழிகளைக் கேட்டதும் பெருமானவர்களுக்கு மயிர்க் கூச்செறிந்தது. மயக்கம் உண்டாயிற்று. மயக்கம் தெளிந்து எழுந்ததும் நடுக்கத்துடன் ஹிராக் குகையிலிருந்து புறப்பட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தார். போர்வையை எடுத்து உடலை மூடிக் கொண்டு படுத்து விட்டார். நடுக்கங் குறைந்து சிறிது மன ஆறுதல் ஏற்பட்டவுடன் நடந்ததை யெல்லாம் தம் மனைவியாரான கதீஜாப் பெருமாட்டியிடம் கூறினார்.

கதீஜாப் பெருமாட்டியவர்கள் பல வகையாகப் பெருமானுக்கு ஆறுதல் கூறித் தேற்றினார்கள். நாயகியார் தம் சிறிய தந்தையின் புதல்வரான வர்க்கா என்பவரிடம் இச் செய்திகளைக் கூறினார். இவற்றைக் கேட்டவுடன் வர்க்கா பெரும் பரவசமடைந்தார்,

“புனிதம்! புனிதம்! மூசா நபியவர்களிடம் வெளியான தேவதூதரே முகம்மது அவர்களிடம் தோன்றி யிருக்கிறார். இவர் மக்களுக்கு ஒரு நபியாக விளங்குவார். அவரிடம் இச்செய்தியைக் கூறித் தைரியமாக இருக்கச் சொல்லுங்கள்” என்று சொல்லியனுப்பினார்.