பக்கம்:நாயகர் பெருமான்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பதிப்புரை

அல்லாஹ் இறைவன். அவன் அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். எல்லாம் வல்லவன். எங்கும் நிறைந்தவன். அவனால் அருளப் பெற்றது திருக்குர்ஆன் வேதம். அவனை வழிபட்டு வாழும் மார்க்கம் இஸ்லாம், அவனுடைய திருத்தூதர் நபிகள் நாயகம். அவர்களின் திருப்பெயர் முகம்மது நபி.

நாயகப் பெருமான் அவர்களால் உலகெங்கும் உண்மையான இறைநெறி பரவிற்று. அவர்கள் வாழ்ந்து காட்டிய பண்பு நெறிகள் உலக மக்களுக்குச் சிறந்த எடுத்துக் காட்டுகளாக அமைந்தன.

அவர்கள் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் இறையருளின் மேன்மையையும், அறிவு நிலையின் உயர்வையும், ஒழுக்க வாழ்வின் சிறப்பையும், அருள் நெறியையும், அன்பின் தன்மையையும் எடுத்துக்காட்டுவனவாக அமைந்துள்ளன.

நாயகப் பெருமான் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகளைச் சமய வேறுபாடு கருதாது எல்லா மக்களும் அறிந்து ஒழுக வேண்டும் என்ற கருத்தோடு, நல்ல தமிழ் நடையில், சிறுவர்களுக்கேற்ற முறையில் நாரா நாச்சியப்பன் அவர்கள் வழங்கியுள்ளார்கள்.

பெற்றோர்களும் ஆசிரியர்களும், சிறுவர்களுக்கு. இந் நூலினை அறிமுகப்படுத்திப் பயன்கொள்ள வேண்டுகிறோம்.

—- தமிழாலயம்