பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ

11


நல்லது. குழவிப் பருவத்திலிருந்தே பற்றுகளை நீக்குக; துறவு! அதனொடு நீ உறவு கொள்க.

“நீ ஓர் ஆண் அழகன், செல்வன்; அதனால் உன்னைச் சுற்றிப் பெண்விழிகள் வட்டமிடுகின்றன; நண்பர்கள் சுற்றி வருகின்றனர்; அன்பு காட்டி அகமகிழ்கின்றனர். இந்த வாழ்வு என்றும் நிலைக்குமா? உன் சுருள் முடி திரை இடுகிறது; கறைபடிகிறது; முதுமைக்கு உன்னை இழுத்துச் செல்கிறது; நோய் உனக்கு நெருங்கிய நண்பன்; வைத்தியன் இடுக்கண் களைய மறுக்கிறான்; கைவிரித்து விடுகிறான்; வந்தவர் கூடி இருந்தவர், “சீசீ இந்தப் பழம் புளிக்கும்” என்று கூறும் குள்ளநரிகளாகின்றனர்; உன்னை விட்டு விலகுகின்றனர்.

சாவு வெற்றி கொள்கிறது; சங்கு முழங்குகிறது; இதுதான் உன் வாழ்வு; இப்பொழுது இளமை வளர் பிறை; பின் தேய்பிறை; முடிவு இருள்நிறை அமாவாசை.

“பள்ளிக்குச் சென்றவன் வருவான், விரைந்து கொள்ளிபோட,” என்று காத்திருக்கிறார்கள் அவன் சுற்றத்தினர்; வேகாத உடம்போடு ஏகாதே வைத்திருக்கிறார்கள். அவள் அவனுக்குத் தாய்; தாய்க்கு அவன் தலைப்பிள்ளை; அவன் என்ன சொல்கிறான்?

“இவள் எனக்குத் தாய்! இவள் எங்கே சென்றாள், தனக்குத் தாயாகிய ஒருத்தி இருக்கும் இடம் தேடிச் சென்றாள்; அவள் தாய், தன் தாயை நாடிச் சென்றாள். இப்படித் தாயர் சென்ற இடங்களுக்கு என்தாய் சென்றுவிட்டாள். அழுது பயன் இல்லை” என்று ஆறுதல் அடைகிறான். நிலையாமை எது என்று அந்த இளமை உணர்கிறது.