பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ

19



இன்னல்கள் வருகின்றன. இடர்ப்பாடுகள் நேர்கின்றன; இவற்றிற்கு எல்லாம் காரணங்கள் உள்ளன; காரணம் இல்லாமல் காரியம் நிகழ்வது இல்லை; கருக்கொள்ளாமல் எதுவும் உருப்பெறுவது இல்லை; நீ செய்த தீவினை அது; உன்னை இந்நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறது; சிந்தித்துப்பார்; உன்னை நீ திருத்திக் கொள்; நல்லதே செய்க! நன்மையே விளையும். வினை விதைத்தவன் வினை அறுப்பான்; இதில் இருந்து யாரும் தப்ப முடியாது; அற நூல்கள் ‘கருமம்’ ‘விதி’ என்று இவற்றிற்குப் பெயர்கள் தருகின்றன; இவற்றை வெல்ல தருமமே தக்க துணை நெறியாகும்.

வாழ்க்கை அர்த்தமுள்ளது; இதனையறியாதவர் இதனை வியர்த்தமாக்கிவிட்டு வருத்தம் அடைவர். “ஏன் பிறந்தேன்?” என்று எழுப்பும் வினாவினை ஒவ்வொரு வரும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்.

பிறந்தாகிவிட்ட்து. அதனைப் பற்றிய பிரச்சினையை எழுப்ப உனக்கு உரிமை இல்லை; ‘நீர்க்குமிழி’ இந்தப் பிறப்பு; அது வெடித்து மண்ணோடு மண்ணாகக் கலந்துவிடுகிறது; ‘சாறு எடுக்கப்பட்ட கரும்பு’; ‘வெறும் சக்கை’; அதனை எரிக்கும்போது யாரும் வருத்தப்படுவது இல்லை; மனிதனும் இனிய கரும்புதான்; அதன் சுவை அதற்கு உதவாது. அதனைக் கடித்துச் சுவைப்பார்க்கே பயன்படும்; பிறர்க்கு அவன் பயன்படுகிறான்; பிறருக்காக உழைக்கிறான்; அவர்களும் இவனை நன்கு பயன்படுத்துகின்றனர்; வாழ்க்கை இனியது; சுவைமிக்கது; சாரம் உடையது; அதன் தன்மை அறிந்து நன்மை அடைக; பிறருக்கு நன்மை சேர்க்க.