பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ

49


ஒதுங்கி வாழ இயலாது; வாழக் கூடாது. ஈகை இல்லை என்றால் அந்த வாழ்க்கை சோகைதான்.

மழை உதவுகிறது; அஃது என்ன எதிர்பார்க்கிறது? கைம்மாறு கருதாத செய்கை அதன்பால் உள்ளது. அஃது உலக அபிமானம்; இந்த உலகம் வாழ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம். மனிதன் பிறர்க்கு ஈவது; தருவது மனித அபிமானம்.

இன்று நாம் உதவினால் மற்றொரு நாள் அவன் திருப்பித் தருவான் என்று நினைப்பது கீழ்மை; சுருக்கமாகச் சொன்னால் வட்டி வியாபாரம்; கூடுதலாகக் கிடைக்கும் என்று நாடுதல் ஆகும்.

நீ தருவது மிகச் சிறியதாக இருக்கலாம்; இன்று இயன்றது அதுதான். இதைப் போல நாளும் செய்துவா! மொத்தத்தில் கணக்குப் போடு; சிறு துளி பெரு வெள்ளம். கேட்பவனும் வீடு வீடு செல்கிறான். ‘ஒரு பிடி சோறு’ என்று தான் கேட்கிறான். அவன் பிச்சைப் பாத்திரம் மணிமேகலையின் அட்சய பாத்திரம் ஆகி விடுகிறது; நிறைந்து விடுகிறது. சிறு பிடிதான்; அது பல படியாகிறது; அதுபோல நீ இடுவது சிறுதுளிதான்; தொடர்ந்து அளித்தால் அது பெருவெள்ளம் ஆகிறது.

கடிப்பு அடிக்கும் முரசின் துடிப்பு; அதன் ஓசை அந்த ஊர் எல்லை வரை மட்டும்தான் எட்டும்; வானத்து இடி அதன் ஓசை மலைகளையும் முட்டும்; நடுங்கச் செய்யும்; அலையோசை போல் அதிரும். நீ கொடுத்து அதனால் எழும் புகழ் ஓசை மூவுலகும் கேட்கும்; எந்த ஓசை மிகவும் பெரிது? யோசித்துப் பேசு; ஈக; அதனால் புகழ் சேர்க்க.