74 - நாலடியார்-தெளிவுரை
14. கல்வி
‘கல்வி, என்பது, ஒருவன் தன் வாழ்வின்கண் தான் செப்பமாகத் தெளிந்த அறிவுடன் நடந்து கொள்வதற்கு உதவும், தகுதியுடைய நூல்களைக் கற்றலைக் குறிப்பதாகும். இதன் இன்றியமையாமை குறளினும் சரி, இந்நூலினும் சரி, அரசியல் தொடர்புடன் ஒட்டியே வற்புறுத்தப்படுகின்றது.
பொதுவாக, அனைவருக்குமே கல்வி இன்றியமை யாததுதான் என்றாலும், பல்வேறு மக்களையும் ஆண்டு, நாட்டைப் பேணிக்காத்து நிற்கும் பொறுப்புடையவர்களுக்கு, அது மிகவும் இன்றியமையாததாகும் என்பது தெளிவாகும்.
கல்வியாவது, தத்தம் தொழிலுக்கு ஏற்ற அறிவுகளைப் பெருக்கிக் கொள்ளலும், உண்மை உணர்வதற்கான விளக்கங்களைக் கேட்டுக் கற்றும் அறிதலும், அங்ஙனம் அறிந்தபின் அவற்றைப் பிறருக்குத் தான் வகுத்துக்கூற வல்லவனாதலும் ஆகும்.
நம் முன்னோர் வாழ்ந்த மரபுகள், அவர்களுடைய சிறந்த எண்ணங்கள், மற்றும் வாழ்வின் செப்பத்திற்கான பற்பல தெளிந்த முடிவுகள் அனைத்தும் தருவது கல்வி. ஆதலின், அனைவரும் கற்றலில் மனஞ்செலுத்துதல் சிறப்பாகும்.
131. குஞ்சி அழகும், கொடுந்தானைக் கோட்டழகும்,
மஞ்சள் அழகும், அழகல்ல,-நெஞ்சத்து, ‘நல்லம்யாம்’ என்னும் நடுவு நிலைமையால் கல்வி அழகே அழகு.
தம்முடைய தலைமயிரினை அழகாகப் புனைந்து கொள்வதனாலே பெறுகின்ற அழகும், உடலினை வளைந்து கொண்டதாக விளங்கும் ஆடையினது கரைகளால் ஏற்படுகின்ற அழகும், நல்ல மணக்கலவைப் பூச்சுக்களை உடலிலே பூசிக்கொள்வதனால் ஏற்படும் அழகும் உண்மையான அழகு அன்று. தம்முடைய நெஞ்சத்திலே, நாம் நல்லவர்கள் என்ற உறுதியினைத் தருகின்ற நடுவுநிலைமையை ஏற்படுத்துவதனால், கல்வியினால் ஏற்படும் அழகே உண்மையான அழகாகும். -
‘உடலழகுகள் நம்மைப் பார்க்கும் பிறருக்கே அழகாகத் தோன்றுவன; ஆனால் உள்ளத்துக்கு அழகு தருவது கல்வியொன்றினால் மட்டுமே அமையும்’ என்பது கருத்து. குஞ்சி-ஆணின் தலைமயிர் கொடும் தானை வளைவுடைய