பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

———————————————————முதல் தொகுதி / மெய் * 101

"துரோகந்தானுங்க, ஆனா என்ன செய்யிறது? எனக்காக மட்டுமா செஞ்சேன்? உங்க கெளரவமும் சம்பந்தப்பட்டிருந்ததே? ஏதாவது தந்திரமாகச் செய்தால்தானே தப்பிக்கலாம்? அதான் அப்படிச் செய்தேனுங்க”

“சரி, எப்படியாவது தொலை”

“எப்படியோ, உள்ளதை வெளியிட்டிடாதீங்க, காலிலே விழுந்து கும்பிடறேன்.” அந்த டிரைவர் உண்மையாகவே என் காலில் விழுந்துவிட்டான்.

அவனது பொய்யில் என் கெளரவமும் உள்ளடங்கியிருப்பதாக அவன் சொன்ன சொல் என்னைத் திகைக்கச் செய்தது!

“நான் காட்டிக் கொடுக்கவில்லை, போ..!"

அன்று, என் கண் முன்னேயே நீதி செத்தது. இன்றோ, உண்மைக் கொலைகாரன் யார் என்ற மெய் எனக்குத் தெரியும். தெரிந்து என்ன பிரயோசனம்? என் கெளரவம் அந்த மெய்யைச் சொல்லவிடாமல் தடுக்கிறது. ஒர் அப்பாவிப் பிச்சைக்காரன் மேல் ஆட்டோரிக்ஷாவை ஏற்றிக் கொன்ற அந்த டிரைவரை நான் நினைத்தால் காட்டிக் கொடுக்க முடியும். ஆனால், அந்த விபத்து நடக்கும்போது அவனுடன் நானும்கூட இருந்திருக்கிறேன். உண்மையைச் சொன்னால் கேஸ் என் பேரிலும் தொடருமே?

விசாரணை நாள் வந்தது. கோர்ட்டில் ஒரே கூட்டம். பிச்சைக்காரனுக்கு யார் வக்கீல்? - ஒருவருமே கிடையாது. சர்க்கார் தரப்பு வக்கீலும் டிரைவரின் வக்கீலும் காரசாரமாக விவாதித்தனர்.

‘டிரைவர் மேல் குற்றமே இல்லை. பிச்சைக்காரன் குடித்துவிட்டு ரோட்டில் அசையாமல் நின்றான். அதனால்தான் விபத்து ஏற்பட்டது!’ என்பதற்கு ஐந்தாறு பேர் சாட்சி கூறினார்கள்.

“பிச்சைக்காரனுக்குக் குடிப்பழக்கம் உண்டு!” என்று அவனைச் சேர்ந்த வேறு சில பிச்சைக்காரர்கள் வந்து சாட்சி கூறினார்கள். எல்லாம் டிரைவரின் பணம் செய்த வேலை.

‘பிச்சைக்காரனின் மரணத்திற்கு அவனே காரணம். அவன் குடித்துவிட்டு வேண்டுமென்றே ஆட்டோரிக்க்ஷாவுக்கு முன்னே வந்து விழுந்ததால்தான் இறக்க நேர்ந்தது. டிரைவர் நிரபராதி!’ என்று சட்டம் தீர்ப்பு வழங்கியது!

சாயங்காலம் அந்த டிரைவர் வந்தான். பழம், மாலை முதலியனவும் அவனுடன் வந்தன.

அவனுடைய பரிசுப் பொருள்களைக் காலால் உதைத்தேன். நான் விம்மினேன்.

ஆம்! அன்று மெய்க்கு மனிதன் பயந்தான்; இன்று மனிதனுக்கு மெய் பயப்படுகிறது. அன்று சத்தியம் மனிதனை ஆண்டது. இன்று சத்தியத்தை மனிதனின் சட்டம் ஆளுகிறது.

(உமா, மே, 1957).