பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

902

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

ஒரு வாரம் கழிந்தது. அருளரசி அன்னை பரிசுத்தாதேவியார் குழுவினருடன் அலைக்கரைப்பட்டியில் நிகழ்ச்சிகளை முடித் துக் கொண்டு பாதயாத்திரையாகத் திரும்பப் புறப்பட்டு விட்டார். பகல் முழுவதும் கிராமங்களில் தங்கல், இரவில் குழுவினருடன் நடை என்று அவர்கள் பாத யாத்திரைத் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. ஏழு நாட்கள் முடிந்த பின், அன்னை பரிசுத்தாதேவி குழுவினர் அலைக்கரைப்பட்டியை விட்டுப் புறப்பட்ட மூன்றாம் நாளோ, நான்காம் நாளோ இரவு பதினொன்றரை மணிக்கு அவசர அவசரமாக இரு எக்ஸைஸ் இலாகா இன்ஸ்பெக்டர்கள் ஜீப்பில் தேடி வந்து திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்த நிருபர் சாமிநாதனை எழுப்பினார்கள்.தங்கள் ஐடெண்டி கார்டுகளைக் காண்பித்தார்கள்.ஒரு முக்கியமான நியூஸை விரிவாக எழுதித் தினசரிகளுக்குத் தந்தி மூலம் தெரிவிக்க வேண்டியிருப்பதால் தங்களோடு ஜீப்பில் வர வேண்டும் என்று சாமிநாதனை உடனே அழைத்தார்கள். சாமிநாதன் உற்சாகமாகப் புறப்பட்டார்.

அப்புறம் விடியற்காலை மூன்று மணிக்கு அவர்களே சாமிநாதனை அலைக்கரைப்பட்டி தபால் தந்தி அலுவலகத்தில் இறக்கி விட்டார்கள்.

“இந்த நேரத்தில் தந்தி வாங்க மாட்டாங்களே சார்…?” என்றார் சாமிநாதன்.

“இதெல்லாம் இன்னிக்கி மட்டும் வாங்குவாங்க. ஸ்பெஷல் ஏற்பாடு இருக்கு. உள்ளே வாங்க. போஸ்ட் மாஸ்டரை எழுப்பி நான் சொல்றேன்” என்று எக்ஸைஸ் இலாகா உயர் அதிகாரியும், இன்ஸ்பெக்டரும் சாமிநாதனை உள்ளே அழைத்துப் போய் போஸ்ட் மாஸ்டரை எழுப்பி ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். தந்தியைக் கொடுத்து விட்டு ‘டீடயில்டு வெர்ஷன் பாலோஸ்’ என்றும் போட்டு விட்டு வீடு திரும்பினார் சாமிநாதன். வீடு திரும்பியதும், உடனே தாம் நேரில் பார்த்ததை வைத்து ‘ஸ்டோரி பில்ட் அப்’ பண்ணித் தலைப்புக் கொடுத்து எழுதி முடித்த போது கிழக்கு வெளுத்து விடிந்து விட்டது.இது போல ஒரு பரபரப்பான நியூஸை அவர் தமது நிருபர் வாழ்விலேயே கண்டதில்லை. எழுதி முடித்த சாமிநாதன் சோம்பல் முறித்தபடி கொட்டாவியோடு திண்ணையிலிருந்து எழுந்திருந்த போது,

“நிருபர்வாள்! ஒரு முக்கியமான செய்தி. உடனே பத்திரிகைக்கு அனுப்பணும். பாத யாத்திரையில் அருளரசியாருக்கு விவரம் புரியாத சில விஷமிகளால் இடையூறு நேர்ந்து விட்டது. இன்னியிலிருந்து அதைக் கண்டிச்சு, அன்னையார் மெளனவிரதம் இருக்காங்க..” என்று சுப்புரத்தினம் பிள்ளை பரபரப்பாகக் கூறியபடி வேர்க்க விறுவிறுக்க வந்தார். சாமிநாதன் அவர் மேல் எரிந்து விழுந்தார்.

“இந்தாங்க பிள்ளைவாள்! அன்னையாராவது, புண்ணாக்காவது? உம்ம நியூஸை உடைப்பிலே கொண்டு போய்ப் போடும். இப்போ இன்னும் ஒரு வாரத்துக்கு எனக்கு நியூஸ் இருக்கு, ஏன்? இந்தக் கிராமமே இனிமே நியூஸ் மயம்தான்!”

“என்ன சொல்றீங்க? புரியலியே?”

“புரியாட்டி இதோ இதைப் படியுங்க.”