பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130. உலகனூர் பஞ்சாயத்தில்
ஒருமைப்பாட்டு விழா

லோகல் அட்மினிஸ்டிரேஷன் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகிகளுக்காக அரசாங்கம் அனுப்பிய விசேஷ அவசர சர்க்குலர் ஒன்று அன்று பகல் ஒரு மணித் தபாலில் உலகனூர் பஞ்சாயத்து யூனியனுக்கு வந்து சேர்ந்தது.

காலையிலிருந்து கடும் தலைவலியோடு மேஜையின் மேல் கால்களைத் தூக்கிப் போட்டுக் கைக்குட்டையால் முகத்தை மூடியபடி தூங்கிக் கொண்டிருந்த கமிஷனர், அல்லது தூங்க முயன்று கொண்டிருந்த கமிஷனர் கண்ணாயிரம் அவர்களை எழுப்பி, அந்தக் கடிதத்தைக் கொடுத்தான், அட்டெண்டர் ஆரோக்கியசாமி. கண்ணாயிரம் அவன்மேல் ‘வள்’ளென்று எரிந்து விழுந்தார்.

“தூங்கற போது எழுப்பாதேன்னு உனக்கு எத்தினி வாட்டி சொல்றது?”

“ஏதோ சர்க்கார் கடிதாசி வந்திருக்குங்க. அதான் எழுப்பினேன்” என்று கூறிக் கொண்டே தலையைச் சொறிந்தான் ஆரோக்கியசாமி. அவன் ஏன் தலையைச் சொறிந்தான் என்று வாசகர்கள் கேட்டுப் பயனில்லை. பியூன் தலையைச் சொறிவது என்பது உலகத்தில் பியூன்கள் ஏற்பட்ட நாளிலிருந்து மரபாக இருந்து வருகிறது. உலகனூர் பஞ்சாயத்து யூனியன் ஆபீஸில் ஆரோக்கியசாமிக்கு அட்டெண்டர் வேலையென்று பெயர் இருந்தாலும், அவன் செய்து கொண்டிருந்தது என்னவோ பியூன் வேலைதான்.

கடிதத்தைப் பிரித்துப் படித்து விட்டு மீட்டிங் கிளார்க்கைக் கூப்பிட்டு, யூனியன் மெம்பர்களுக்கும் சேர்மனுக்கும் ஸர்க்குலர் அனுப்பச் சொன்னார் கமிஷனர்.

“ஸர்க்குலர் அனுப்பறது சரி. அஜென்டாவிலே என்னன்னு போடறது…?” என்று சந்தேகத்தைக் கிளப்பினார் மீட்டிங் கிளார்க் .

“தேசீய ஒருமைப்பாட்டு விழாவைக் கொண்டாடணுமாம், கவர்மெண்ட் ‘ஸர்க்குலர்’ ஒண்ணு வந்திருக்கு. அதை முதல்லே எழுது. அப்புறம் ‘அஜெண்டா’விலே வழக்கமா உள்ளதெல்லாம் போட்டுக்க, ‘ஸ்டிரீட்லைட்பெஸிலிட்டிஸ்’ - பஞ்சாயத்து லைப்ரரீஸ்னு இன்னும் ரெண்டு மூணு அயிட்டமும் போட்டுக்க”.

“தேதி எல்லாருக்கும் ஒத்து வரணுமே; சேர்மனுக்குத் தேதி ஒத்து வந்தா-வைஸ் சேர்மனுக்கு ஒத்து வராது. இரண்டு பேருக்கும் ஒத்து வந்தா, மெம்பர்ஸுக்கு ஒத்து வராது...?”

“ஏன் நிறுத்திப்பிட்டே…? பாக்கியையும்தான் சொல்லிப்பிடேன் - அத்தினி பேருக்கும் ஒத்து வந்தாக் கமிஷனருக்கு ஒத்து வராதுன்னு.”