பக்கம்:நித்திலவல்லி.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

163


“நீங்கள் மட்டு மின்றி எல்லாருமே அப்படித்தான் நம்புகிறோம். ஆனால், கடந்த சில நாட்களாக வெளியே இரவும் பகலும் என்னென்ன நடைபெறுகின்றன என்பதைக்கூட அறிய முடியாமல் நாம் இங்கே முடங்க நேரிட்டதே ? யாரிடமிருந்தும் எந்தச் செய்தியும் தெரியவில்லை. காரி, கழற்சிங்கன், சாத்தன், தேனூர் மாந்திரீகன் செங்கணான் ஆகிய நம் நண்பர்கள் என்ன ஆனார்கள் என்பதும் தெரிய வில்லையே?” என்று கேட்டுக்கொண்டே சற்று முன்பு அங்கு வந்திருந்த அழகன் பெருமாள் காரியக் கவலையோடு பேசினான். அந்த மாளிகையில் கழிந்த ஊமை நாட்களில் முதன் முதலாக அழகன் பெருமாள் தன்னிடம் மெளனத்தைக் கலைத்துக்கொண்டு பேசவந்திருப்பது இளையநம்பிக்குப் புரிந்தது. சில நாட்களாக அவனுக்குத் தன் மீது ஏற்பட்டிருந்த மனத்தாங்கல் மாறித் தன்னோடு மேலே என்ன செய்வது என்பது பற்றிப் பேச முன்வரும் நிலைமை இயல்பாக ஏற்பட்டிருப்பதை இளையநம்பி வரவேற்றான் என்றாலும் அழகன் பெருமாளின் வினா அவனுள் கோபமூட்டியது:

“காரி, கழற்சிங்கன் முதலிய நண்பர்களைத் தேடவும், உயிருக்கு ஆபத்தின்றிப் பாதுகாக்கவும் நாம் விரைந்து ஆவன செய்யவேண்டும் என்று கோட்டைக் கதவுகள் அடைக்கப் பட்டபோதிலிருந்து நான் விடாமல் உன்னிடம் வற்புறுத்தி வருகிறேன் அழகன் பெருமாள்! அப்போதிருந்து நீதான் அவர்களைப் பற்றிக் கவலைக்கு இடமின்றி மறுமொழி கூறியிருக்கிறாய். ‘அவர்கள் எவ்விதத்திலும் பத்திரமாக இந்த மாளிகைக்குத் திரும்பிவந்து விடுவார்கள்'- என்று உறுதியளித்திருக்கிறாய். உன்னுடைய அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை எனக்கே வியப்பை அளித்திருக்கிறது. இப்போதோ நீயே என்னிடம் வந்து வேறுவிதமாகக் கேட்கிறாய். நான் என்ன மறுமொழி கூறுவது உனக்கு?” -என்று சிறிது சினத்துடனேயே அழகன் பெருமாளைக்கேட்டான் இளையநம்பி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/164&oldid=715362" இலிருந்து மீள்விக்கப்பட்டது