பக்கம்:நித்திலவல்லி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

நித்திலவல்லி / முதல் பாகம்


மயமான சாயலைக் காண முடிந்தது. இளையநம்பி அவரைப் பதிலுக்கு வணங்கினான்.

“தம்பி! இவரை நீ தெரிந்துகொள்ள வேண்டும். என்னை நிழல்போல் நீங்காமல் பாதுகாத்துவரும் முனையெதிர்மோகர் படை இளைஞர்களுக்கும், தென்னவன் ஆபத்துதவிகளுக்கும் வயிறு வாடாமல் சோறளித்துக் காக்கும் திருமோகூர்ப் பெரியகாராளர் இவர்தான். இவருடைய செந்நெற் கழனிகளில் விளையும் நெல்லெல்லாம் இந்தப் பகுதியிலும், சுற்றுப் புறங்களிலும் மறைந்திருக்கும் நம்மவர்களுக்குப் பயன்படுகின்றன. மறுபடி பாண்டியராட்சி மலர வேண்டும் என்று அக்கறை காட்டும் நல்லவர்களில் இவர் முதன்மையானவர். அரசியல் காரணங்களுக்காகவும், தான் செய்துவரும் உதவிகள் களப்பிரர்களால் தடுக்கப்பட்டு விடக்கூடாதே என்பதற்காகவும் அந்தரங்கமாகவும் தந்திரமாகவும் இவர் அதைச்செய்து வருகிறார். இன்று நண்பகலில் இவர் நீ தலைநகரை அடைவதற்கு ஏற்பாடுகள் செய்திருக்கிறார். ஒரு மண்டலம் நீ அகநகரிலும் சுற்றுப் புறங்களிலும் அலைந்து நிலைமைகள் எவ்வாறு இருக்கின்றன என்று அறிந்து வர வேண்டும். நீ போகிற இடங்களில் எல்லாம் நம்மவர்கள் நிறைய இருக்கிறார்கள். நம்மைத் தொலைத்துப் பூண்டோடு கருவறுத்து அழித்துவிட நினைப்பவர்களும் நிறைய இருக்கிறார்கள். இரு தரப்பாரையும் நீ இனங்கண்டு கொள்ள வேண்டும். ‘வாயிலிருக்கிறது வழி’ என்ற பழமொழி ஞாபகம் இருக்கட்டும். உன்னுடைய நல்லடையாளச் சொல்லுக்கு எந்த இடத்தில் மறுமொழி கிடைக்க வில்லையோ அங்கே சந்தேகம் எழ இடமின்றி உடனே பாலியில் பேசிவிடு. நம்முடைய காரியங்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காக உனக்கு ஓரளவு பாலிமொழியும் கற்பித்திருப்பதாக உன் பாட்டனார் திருக்கானப்பேர் விழுப்பரையர் ஏற்கெனவே முன்னொரு சமயம் எனக்குச் சொல்லியனுப்பியிருந்தார். தங்களை எதிர்ப்பதற்கு எந்தக் கலகத்தை யார் செய்தாலும் அவர்கள் சக்தி வாய்ந்தவர்களாகவும் சாதனங்களை உடையவர்களாகவும் இருக்கக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/35&oldid=715054" இலிருந்து மீள்விக்கப்பட்டது