பக்கம்:நித்திலவல்லி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

35


கூடாது என்பதற்காகக் களப்பிரர், குதிரைகள், யானைகள், தேர்கள், படைக்கலங்கள் போன்றவற்றைப் பொதுமக்கள் பயன்படுத்த முடியாதபடி செய்து விட்டார்கள். அதை நாம் பொருட்படுத்தாவிட்டாலும் நம்மிடையே நாம் பயன்படுத்துவதற்குக் குதிரைகளும், யானைகளும், தேர்களும், படைக்கலங்களும் இன்று அதிகம் இல்லை.”

“நாம் நினைத்தால் அவற்றைப் படைத்துக் கொள்ள முடியும் ஐயா! அதற்கு வேண்டிய ஆட்களை நாம் மிக எளிமையாகத் தேடிவிட முடியும் என்று எனக்குத் தோன்றுகிறது. அந்தத் திருமோகூர் வேளாளர் தெருவில் ஒரு வலிமை வாய்ந்த கொல்லனை நேற்று நான் சந்தித்தேன். மீண்டும் பாண்டியராட்சி மலர்வதற்காக அவன் எந்த ஒத்துழைப்பையும் அளிக்க ஆயத்தமாயிருப்பான்.”

“தம்பீ! நீ நேற்று மட்டும்தான் அவனைச் சந்தித்தாய். நானும் காராளரும் நாள் தவறாமல் அவனைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அவன் நம்மவர்களில் ஒருவன்தான். ஆனாலும் அவன் தன்னுடைய உலைக்களத்தில் வாளும், வேலும், ஈட்டியும் செய்யக்கூடாதென்பது உனக்குத் தெரியுமா? கலப்பைக்குக் கொழு அடிப்பதை மட்டும்தான் களப்பிரர்கள் விட்டு வைத்திருக்கிறார்கள்.”

“இவ்வளவு பயங்கரமான அடிமைத்தனத்தில் இந்த மங்கலப் பாண்டிவள நாடு முன்பு எந்தக் காலத்திலும் வாழ்ந்திருக்க முடியாது ஐயா!”

“கவலைப்படாதே தம்பீ! மக்களின் நியாயமான நல்லுணர்ச்சிகளை ஒடுக்கும் எந்தக் கொடுங்கோல் ஆட்சியும் நிலைக்க முடியாது. அழ அழக் கொள்ளையடித்த செல்வங்கள் எல்லாம் அழ வைத்துவிட்டே நீங்கும். அடிமைப்படுத்துகிற ஒவ்வொருவரும் தன் பிடி இறுக இறுக அதே வேகத்தில் சுதந்திர உணர்ச்சி வளர முடியும் என்பதை மறந்து விடுவது வழக்கம். களப்பிரர்களுக்கும் இன்று அந்த மறதி வந்து விட்டது. இந்த ஆண்டிற் குளித்த கொற்கைத் துறை முத்துக்கள் எல்லாவற்றையும் சோனர்களுக்கு ஏற்றுமதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/36&oldid=715066" இலிருந்து மீள்விக்கப்பட்டது