பக்கம்:நித்திலவல்லி.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

414

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்


நினைவு வைத்திருக்கிறீர்களோ இல்லையோ, தங்களை நித்தியமாகவும், நிரந்தரமாகவும், நினைவு வைத்துப் போற்றுவது இப்பேதையின் கடமையாகி விட்டது. திருமோகூரில் இருந்தாலாவது, கொல்லன் எதிர்ப்படுகிற போதெல்லாம் நேராகவோ, குறிப்பாகவோ, தங்களைப் பற்றி விசாரித்து அறிய முடியும். இன்னும் சில திங்கள் காலத்துக்குத் தீர்த்த யாத்திரை செய்ய வேண்டும் என்று பெரியவர் இட்ட கட்டளையை மேற்கொண்டு, நாளைக் காலையில் பிரம்ம முகூர்த்தம் கழிவதற்குள் மங்கல நேரத்தில் தந்தையும், தாயும், அவர்களோடு நானும் யாத்திரை புறப்படுகிறோம். இனி மேல் தங்களைப் பற்றி ஆவல் தீரக் கேட்டறியவோ, விசாரிக்கவோ கூட என்னருகே மனிதர்கள் இல்லை. தந்தையிடம் நானாக வலியச் சென்று, தங்களைப் பற்றிப் பேச முடியாது. தாயிடம் பேசினால், அவள் சந்தேகப்படுகிறாள். என் உணர்வுகளைப் பெற்ற அன்னையிடம் கூட நான் பூரணமாகக் காண்பித்துக் கொள்ள முடியவில்லை. எங்கள் ஊருக்கு நீங்கள் வழிப்போக்கராகப் பிரவேசித்த முதல் தினத்தன்று, நீங்கள் என்னை ஊமை என்பதாகக் கூறி ஏளனம் செய்தீர்கள். அப்போது அன்று நான் காரியத்திற்காக ஊமையாக நடிக்க வேண்டியிருந்தது. இப்போதெல்லாம், உங்களைப்பற்றிப் பேசவோ, விசாரிக்கவோ, அருகில் யாருமே அந்தரங்கமானவர்கள் இல்லாத காரணத்தால், நான் உண்மையிலேயே ஊமையைப் போலாகி விட்டேன். வாய் திறந்து நான் பேசும் எதுவும் உங்களைப் பற்றிய பேச்சாகவே இருக்க வேண்டுமென்று தவிப்பதால், வேறெதையும் நான் பேச முடியவில்லை. செவிகளால் கேட்க முடிந்த எதுவும் உங்களைப் பற்றிய நற்செய்திகளாகவே இருக்க வேண்டும் என்று தவிப்பதால், வேறெதையுமே நான் கேட்க முடியவில்லை. உங்கள் மேற்கொண்ட காதல் இப்படி என் பொறி புலன்களின் இயக்கத்தைக் கூட ஒடுக்கி விட்டது. தாபத்தில் உருகுகிறேன். கோபத்தில் உங்களைச் சபித்து விட வேண்டும் போல் ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. தாபமும், கோபமுமே என்னைக் கொல்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/412&oldid=946630" இலிருந்து மீள்விக்கப்பட்டது