பக்கம்:நித்திலவல்லி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

63



கடம்ப மரத்தடியில் மீண்டும் போய் அமர்ந்தான் இளைய நம்பி. நேரம் ஆகிக் கொண்டே இருந்தது. கலகலப்பு நிறைந்திருந்த வெள்ளியம்பல மண்டபமும் உறக்கத்தில் அடங்கி விட்டது. மண்டபத்தின் வடக்குக் கோடியில் நீண்ட நேரமாய் உரத்த குரலில் ‘மாயை ஏன் அநிர்வசனீயமாக இருக்கிறது?’ -என்று விவாதித்துக் கொண்டிருந்த ஒரு சமணத்துறவியும் வட மொழிவாணரும் கூட நடுச் சாமத்திற்கு மேல் உறக்கத்தைக் கெடுத்துக் கொள்ளும் அளவுக்கு மாயையைப் பற்றிக் கவலைப்பட விரும்பாமல் நன்றாக உறங்கத் தொடங்கியிருந்தனர். வெள்ளியம்பல மன்றின் தோட்டத்தில் ஒர் ஆந்தை இரவின் தனிமைக்கு உருவகம் தருவது போல விட்டு விட்டு அலறிக் கொண்டிருந்தது. அந்த மரத்தடியில் தனியே விழித்திருப்பது பொறுமையைச் சோதிக்கும் காரியமாயிருந்தது. இலைகள் அசையும் ஓசை கூடப் பெரிதாகக் கேட்கும் அந்த நிசப்தமும், அதை இடை இடையே கிழிக்கும் ஆந்தையின் அலறலும், பின்னிரவின் வரவிற்குக் கட்டியம் கூறுவது போன்ற குளிர்ந்த காற்றுமே அந்த வேளையில் அங்கே அவனுக்குத் துணையிருந்தன. தன்னைச் சந்திக்க வேண்டியவன் வழி தவறிவிட்டானோ அல்லது வரவில்லையோ என்ற கவலையில் இளையநம்பி நம்பிக்கை இழக்கத் தொடங்கிய வேளையில் மண்டபத்திற்குள் வரிசை வரிசையான தூண்களின் அணி வகுப்புக்கு நடுவே இருபுறமும் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களை மிதித்துவிடாமல் கவனமாக நடந்து வரும் ஒரு மனிதன் எதிர்ப்பட்டான். அந்த அமைதியில் நெடுந்துாரம் தெரியும் தூண்களின் வரிசைக்கு ஊடே இருபுறமும் படுத்து உறங்குகிறவர்களின் கால்களுக்கு நடுவில் தானாக நேர்ந்திருந்த ஒற்றையடிப் பாதையில் அடிபெயர்ந்து நடக்கும் ஒசைகூடக் கேட்டுவிடாமல் அவன் நிதானமாகவும், கவனமாகவும் நடந்துவருவது மெளனமே உருப்பெற்று எழுந்து வருவது போலிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/64&oldid=715222" இலிருந்து மீள்விக்கப்பட்டது