74
நித்திலவல்லி / முதல் பாகம்
“இருக்கலாம், அம்மா! ஆனால், ஒரு பலமான நம்பிக்கையின் மறுபுறத்தில்தான் பலவீனமான அவநம்பிக்கைகளும் அச்சங்களும் தோன்றுகின்றன.”
“நீ சொல்வது தவறு செல்வப் பூங்கோதை! ஒரு பலமான நம்பிக்கைக்கு மறுபுறமே கிடையாது. பலவீனமான நம்பிக்கைக்குத்தான் மறுபுறங்கள் உண்டு. திடமான முடிவுக்கு முதல் எண்ணம்தான் உண்டு. இரண்டாவது எண்ணமே இல்லை என்பதை நீ ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.”
தாயின் உறுதிமொழியால் ஓரளவு மனநிறைவு அடைந்தாள் அவள். தன்னுடைய அன்பின் மிகுதியால் இணையற்ற வீர இளைஞர் ஒருவரைக் குறைத்து மதிப்பிட நேர்ந்ததை மற்றொரு கோணத்திலிருந்து தாய் சுட்டிக் காட்டியபோது தன் சிந்தனையை எண்ணித் தானே வெட்கப்பட்டாள் அவள்.
திருவாலவாய்க்கோவிலிலும் வழிபாட்டை நிறைவேற்றிக் கொண்டு மோகூர் திரும்புவதற்காகக் கோட்டைக்கு வெளியே புறநகரை அடைந்து வண்டிகள் வையையைக் கடந்து கரையேறியபோது இரவு நெடுநேரமாகி விட்டது. எப்படியும் இரவோடிரவாக அவர்கள் மோகூர் திரும்பியாக வேண்டியிருந்தது. வழிபாட்டுக்கு மட்டுமே அவர்கள் மதுரை வந்திருந்தால் இவர்கள் திரும்பி வந்து சேருவதுபற்றிக் காராளர் கவலையின்றி நம்பிக்கையோடிருப்பார். இளைய நம்பியைத் தந்திரமாகக் கோநகருக்குள் கொண்டுவந்து விடவேண்டிய பொறுப்பும் சேர்ந்திருந்ததால் தாங்கள் திரும்புவதைத் தந்தை ஆவலோடும், கவலையோடும் எவ்வளவிற்கு எதிர்பார்த்திருப்பார் என்பதைச் செல்வ பூங்கோதை உணர்ந்திருந்தாள். அவளுடைய மனநிலையையும் அவள் தாயின் மனநிலையையும் உணர்ந்தவர்கள் போல் புறநகரிலிருந்து மோகூருக்குச் செல்லும் சாலையில் வண்டிகளை விரைந்து செலுத்தினார்கள் ஓட்டுபவர்கள்.