392 நினைவு அலைகள் என் பல்கலைக் கழகத் தேர்வுக்குப்பின் வெளியான நூல்களையும் அவருடைய நூலகத்தில் கண்டது பாராட்டுக்குரியதாக அமைந்த்து. செல்வர்களிடையே அரிதாகக் காணும் பரந்த படிப்பு ஆர்வத்தை அவரிடம் கண்டு வியந்தேன். அவரோடு, மிகுந்த மதிப்புடன் உரையாடினேன். சூனாம்பேடு ஜமீன்தாரின் அறிமுகம் அப்படி உரையாடும்போது, மேலே துண்டு மட்டும் போட்டுக் கொண்டிருந்த பெரியவர் ஒருவர் மடமடவென்று, பங்களா மண்டபத்துக்குள் நுழைந்தார். அவரைக் கண்டதும் திரு. சிவசங்கரன் எழுந்து வரவேற்றார். நானும் எழுந்து அடக்கமாக நின்றேன். வந்தவரோ எனக்குப் புதியவர். அவரிடம் என்னை "இவர். உங்கள் மாவட்டத்துக்காரர். நெய்யாடுபாக்கம் துரைசாமி மகன்' என்று திரு. சிவசங்கரன் அறிமுகப்படுத்தினார். அடுத்தநொடி, எங்கள் மாவட்டத்துப் பெரியவர் என்னைப் பார்த்து. "நீதானா,சுந்தரசேகரத்தின் அக்காள் மகன்; பொருளியல் சிறப்புப் பட்டம் பெற்றவன்' என்று கேலியுடன் படபடப்போடு கேட்டார். "ஆமாங்க" என்று பணிவோடு கூறினேன். அடுத்து, 'இப்போது என்ன செய்து வருகிறாய்?' என்று கேட்டார். 'வேலைக்குக் காத்துக் கொண்டிருக்கிறேன்' என்றேன். பெரியவருக்கு வெகுளி வெடித்து வந்தது. 'பெரிய படிப்புப் படித்துவிட்டாய்! எங்கேயாவது எழுத்தர் வேலைக்கு முயன்றால் அது கிடைக்கலாம். உனக்கு அது போதாது? பெரிய வேலையாக வேணுமாக்கும்! இப்படி இருந்தால் எப்படி பிழைப்பாய்' என்று பொரிந்தார். பெரிய படிப்புப் படித்ததாக, நான் நினைத்ததில்லை. சிறிய வேலை செய்யக்கூடாதென்று சுணங்கியதும் இல்லை. அறிமுகமில்லாத பெரியவர் ஒருவர் இப்படிப் பேசியதையும் நான் அதற்கு முன் கேட்டதில்லை. எனவே, நொடியில் என் முகம் வாடிவிட்டது. ஆனால், வாய் திறக்கவில்லை. பெரியவர் கண்டனத்தை முடித்ததும் சிவசங்கரர் தலையிட்டார். 'இவ்வளவு படிப்பு: ஒழுங்காகப் படித்து, நல்லபடி தேர்ச்சி பெற்றவர்கள் நம்மில் சிலரே. அவர்களின் நினைப்பாவது உயர்வாக இருக்கட்டுமே. எடுத்த எடுப்பிலேயே, சிறியதோடு நிறைவு கொள்ளும்படி, உங்களைப் போன்ற பெரியவர்கள் சொல்லலாமா?