நெ. து. சுந்தரவடிவேலு 55 சாதிபற்றி மேலென்றும் கீழென்றும் மதிப்பிடுவதை விட்டு விட்டேன். - எனவே, என்னை ஒட்டன்' என்று ஆசிரியர் கூறியதைக் கேட்டு நான் புண்படவில்லை. மேலும் தமிழாசிரியரின் குரலில் எந்தவித ஏளனமோ, கண்டனமோ, கடுமையோ ஒலிக்கவில்லை. எனவே, அவர் அடைமொழியை அலட்சியப்படுத்திவிட்டேன். அவர் ஆணைப்படி நடந்தேன். மாலையில், அவர்முன் இருந்து மனப்பாடஞ் செய்தேன். சரியாக ஒப்புவித்துவிட்டு, வீடு திரும்பினேன். சாதி உணர்வு இல்லாத ஆசிரியர்கள் வடமொழி சொல்லிக் கொடுக்கவும் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆசிரியர் பெயர் திரு. சாஸ்திரியார். வடமொழி வகுப்பில் பார்ப்பனர்களே சேரலாம் என்பது அன்றைய நடைமுறை. உருது மொழியும் சொல்லிக் கொடுக்கப்பட்டது. நான் படித்த காலத்தில் பத்தாம், பதினோராம் வகுப்புகளில் ஒவ்வொருவரும் இரு விருப்ப பாடங்களைக் கட்டாயம் கற்க வேண்டும். திரு. சங்கர அய்யர் என்பவர் எனக்குப் பெளதிகம் கற்றுக் கொடுத்தார். அவரும் சாதிச் சார்பு இல்லாமல் எல்லோரிடமும் நன்றாகப் பழகினார். அன்போடு கற்றுக் கொடுத்தார். அவருடைய அசாதாரண பழக்கம் ஒன்று, எங்களுக்கு நகைப் பூட்டும். அதை அவர் ஒருபோதும் உணரவில்லை. அது என்ன பழக்கம்? அவர் நின்றுகொண்டே பாடஞ் சொல்லும்போதே, பின்னால் திரும்பித் திரும்பிப் பார்ப்பார். அதைப் பார்த்து எங்களுக்குள் எழுந்த சிரிப்பை அடக்கிக்கொள்ள, நாங்கள் பட்டபாடு பெரிது. - தலைமை எழுத்தர் திரு. தேவராசனையும் எந்த மாணவரும் மறக்க முடியாது. அவருக்கும் நன்மதிப்பு இருந்தது. தனக்கென்று வீடு வாசலும் இருந்தன. அவரும் அன்பாகப் பழகுவார். அவருடைய மகன் கா. தே. தி. அரசு பள்ளியில் என் நண்பர். பிறகு பொதுத் தொண்டில் ஈடுபட்டுத் திராவிடர் கழகத்தின் வாயிலாக நாடறிந்த C.D.T. அரசாக விளங்கியபோதும் எனக்கு மிக நல்ல நண்பராகவே இருந்தார்.