நெ. து. சுந்தரவடிவேலு 261
புதிய நியமன ஆணை மாதக் கணக்கில் தாமதமாகட்டும் என்று விழைந்தேன். அதுவோ இருபத்து அய்ந்து நாள்களில் என் கைக்கு வந்தது.
அதைப் பெற்ற பிறகு அப் பதவியை ஏற்க ஆர்வமின்றி இருந்தேன்.
மாநகராட்சி ஆணையர் திரு. சி. எச். நரசிம்மம் 31-3-1948 காலை 11 மணிக்கு என்னோடு தொலை பேசி வழியாகத் தொடர்பு கொண்டார்.
‘மாநகராட்சியில் ஒரு மரபு உண்டு. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31ஆம் நாள், அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை மன்றம் நிறைவேற்றும். அன்றிரவே, மேயர், மன்ற உறுப்பினர்களுக்கும் அலுவலர்களுக்கும் பலமான விருந்து அளிப்பார்.
‘இன்று மாலைக்குள் நீங்கள் மாநகர் ஆட்சிக் கல்வி அலுவலராகச் சேர்ந்து அந்த விருந்துக்கு வரவேண்டும், என்று மேயர் விழைகிறார்; நானும் தங்களை அப்படியே அழைக்கிறேன்.
‘இன்று காலை, உங்கள் கல்வி இயக்குநரோடு பேசியுள்ளேன். அவர் உங்களை விடுவிக்க ஒப்புக்கொண்டார். எப்படியாவது மாலை அய்ந்து மணிக்குள் வந்து சேருங்கள்; நேரே என்னிடம் வாருங்கள், இப்படி ஆணையர் கூறினார்.
இயக்குநர் விடுவித்ததும் வந்து சேருகிறேன்’ என்று சொன்னேன்.
மேயரும் ஆணையரும் ஏன் இவ்வளவு பரிவு காட்டுகிறார்கள் என்று எனக்குப் புலப்படவில்லை.
புதிய மணப் பெண், முதல் முதல் மாமியார் வீட்டிற்குச் செல்லும் போது என்ன மனநிலையில் இருப்பாளோ அந்த நிலையில் நான் இருந்தேன்.
பிறகு, இயக்குநர் என்னைத் தொலை பேசியில் கூப்பிட்டார். சில மணித்துளிகளில் உன்னை விடுவிக்கும் ஆணைவரும்; நீ விரும்பினால் அன்றே பொறுப்பை ஒப்புவித்துவிட்டு, மாநகர் ஆட்சிக்குச் செல்லலாம். என்றார்.
அதன்படி ஆணை வந்தது; பழைய பொறுப்பைக் கொடுத்து விட்டேன். புதிய பொறுப்பிற்குச் சென்றேன்.
புகழ் பெற்ற மேயர் டாக்டர் யூ. கிருஷ்ணாராவ்
பொறுப்பை ஏற்கும் முன் முதலில் மாநகராட்சி ஆணையரைக் கண்டேன்.