நெ. து. சுந்தரவடிவேலு 19
‘'நான் உங்களை மாவட்டக் கல்வி அலுவலர் பணிக்கு முன் பயிற்சி கொடுக்க வேண்டும் என்பது இயக்குநர் இட்டிருக்கும் ஆணை. ஆனால் உங்களுக்கு, இயக்குநர் பதவிக்கே பயிற்சி கொடுக்கப் போகிறேன்.
‘நீங்களும் இயக்குநர் பொறுப்புக்குப் பயிற்சி பெறுகிறோம் என்று நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உள்ளுதல் எல்லாம் உயர்வாக இருக்கட்டும்’ என்று மனமார வாழ்த்தி, கட்டித் தழுவிக் கொண்டார்.
இத்தகையோர், சிலராவது இருப்பதால்தான், நாடு காடாகாமல் இருக்கிறது.
என்னை உளமார வாழ்த்திய அவ்வேளையே, நல்ல செய்தியைக் கூறத் தக்க தருணம் என்று எண்ணினேன்.
காதும் காதுமாக, திரு. குலாம்தஸ்தகீர் அவர்களிடம் இயக்குநர் அனுப்பிய செய்தியைக் கூறினேன்.
அதைக் கேட்டதும் அப்பெரியவர், உணர்ச்சிப் பிழம்பானார்.
சதிக் கதை
‘அதெல்லாம் எங்கே நடக்கப்போகிறது? இயக்குநர் நல்லவர்; அவர் நல்லது செய்ய, நீதிபெற முயலலாம். இக்காலத்தில் போருக்கு எதிரி என்று பொய்யாகச் சொன்னாலும் போதும், இந்தப் போர்க் காலத்தில், எவர் உண்மையைக் கண்டுபிடிக்கப் போகிறார், நியாயம் வழங்கப் போகிறார்?’ என்று கூறினார்.
‘இல்லை அய்யா இயக்குநர் திட்டவட்டமாக, ஆனால் இரகசியமாக இதைச்சொல்லி அனுப்பினார்.
‘நம் இயக்குநர் அளந்து பேசுபவர் என்பது உங்களுக்கே தெரியும். உங்களுக்குப் பதவி உயர்வு கொடுப்பதைப் பற்றி உறுதிப்படுத்திக் கொள்ளாமல் செய்தி அனுப்ப மாட்டார் என்று பெரியவரைத் தேற்ற முயன்றேன்.
பெரியவர் உள்ளம் திறந்து, சதிக் கதையை அவிழ்த்து விட்டார். ‘இப்போது நடக்கும் இரண்டாம் உலகப்போருக்குப் பலரும் பலவகையில் ஆதரவு திரட்ட வேண்டியிருக்கிறது. கல்வித் துறையில் உள்ள நாம் நிதி, பொருள் ஆதரவு திரட்டுவதோடு, கருத்து ஆதரவும் திரட்ட வேண்டும்.
‘அதற்காக, ஒவ்வொரு மாவட்டக் கல்வி அலுவலரும் ஆசிரிய மையங்களுக்குச் சென்று உரையாற்ற வேண்டும். உயர்நிலைப்