நெ. து. சுந்தரவடிவேலு 397
சொல்லத் தகுதியான பெரும் நிகழ்ச்சிகளை - நன் நிகழ்ச்சிகளை சொல்ல வேண்டிய நேரங்களில் சொல்லத் தவறிவிட்டால் - அவற்றை இருட்டடிப்புச் செய்யத் துணை நின்றால் - எவரெஸ்ட் முடி அனைய நம்மவர்களும், பறங்கிமலைக் குன்றாக உலகிற்குத் தோன்றுவதில் வியப்பு என்ன!
ஒவ்வோர் இந்தியனும் ஒவ்வோர் தமிழனும் தலைநிமிர்ந்து பார்க்கக்கூடிய சாதனையொன்றை உலகம் கண்டது.
டாக்டர் எஸ். சந்திரசேகரன் என்னும் தமிழர் நோபெல் பரிசு பெற்றார். -
தமிழ்ச் செய்தி உலகம் - இதழ் உலகம் - இதை எவ்வளவுக்குப் பொதுமக்கள் முன் கொண்டு வந்தது?
நம்மவர் ஒருவர் உலகப் பரிசு பெறும் அளவு வளர்ந்துள்ளதைத் திரும்பிய பக்கமெல்லாம் கண்களில் படும்படி வெளியிட்டிருந்தால், அது இளைஞர்களுக்கு ஊக்கமூட்டியிருக்கும்.
அதை விட்டு விட்டு, களவு, கொள்ளை, வழிப்பறி, கற்பழிப்பு, மோசடிச் செய்திகளையே தேடித் தேடிக் கொட்டை எழுத்துகளில் பொது மக்கள் முன் வைக்கும் சமுதாயத்தில்-தலைமுறையில்-எந்த இளைஞருக்கு நோபெல் பரிசு பற்றிய சிந்தனை பிறக்கும்?
எதை விதைக்கிறோமோ அதை அறுக்கிறோம். தீய நடத்தைகளைப் பற்றிய செய்திகளையே கொடுத்துக் கொண்டிருந்து விட்டு, சீலம் பழுக்கவில்லையே என்று ஒப்பாரி வைத்துப் பயன் என்ன?
இருட்டடிப்புப் போக்கை விடும் பாடமே நமக்கு அரிச்சுவடி - முதற்பாடமாகும்.
தொடர்புகளை அழிப்பதில் மட்டுமே நாட்டம் செலுத்திவிட்டு, இனப் பகையை வளர்த்துக்கொண்டே, காலம் போக்கும் நம்மைப்பற்றி இப்போது இவ்வளவு போதும்!
திருவள்ளுவன் மாடியிலிருந்து விழுந்தான்
பொதுக்கல்வி இயக்கக வளாகத்தில், நான் குடியிருந்தபோது வேதனையான விபத்து ஒன்று நடந்தது.
இயக்குநர் ஆணைப்படி ஒருநாள் காலை பேராசிரியர் ஹகார்ட்டி என்ற அமெரிக்கக் கல்வியாளரையும் அவரது மனைவியையும் சில கல்வி நிலையங்களைக் காண அழைத்துச் சென்றேன்