நெ. து. சுந்தரவடிவேலு 419
துளிகள் இருந்தன. அய்ந்து மணித்துளிகளில் அலுவலகம் வந்து சேர்ந்தோம்.
தம் அறைக்குள் நுழைந்ததும் இருவருக்கும் சிற்றுண்டியும் காப்பியும் வாங்கி வரும்படி தமது எழுத்தருக்கு அவசரமாக ஆணை இட்டார்.
கிருஷ்ணசாமி அய்யங்காரையும் திறமையான தட்டச்சர்கள் இருவரையும் அடிப்படை ஊழியர்கள் இருவரையும் வீட்டுக்குப் போகாமல் இருக்கும்படி ஆணையிட்டார். அவர்களும் மகிழ்ச்சியோடு இருந்து உதவினார்கள்.
எரிச்சலுட்டும் தொடக்கம்
இயக்குநர், ‘இப்போது நான் சுற்று அறிக்கையைச் சொல்லிக் கொண்டே வருவேன்; நீங்கள் கையெழுத்தில் எழுதி வாருங்கள். தகவல் பிழையோ, வேறு குறைகளோ கண்டால் என்னிடம் கூறுங்கள்’ என்று ஆணையிட்டார்.
‘திருத்தி அமைக்கப்பட்ட தொடக்கக் கல்வித் திட்டம்’ என்ற தலைப்போடு சுற்றறிக்கையைத் தொடங்கினார்.
சுற்றறிக்கையின் முதற் சொற்றொடர் என்ன தெரியுமா?
‘பிள்ளைகள், பெற்றோர் தொழிலைச் செய்வதால் தீங்கொன்றும் இல்லை’ என்று தொடங்கிற்று.
அதைக் கூறியதும்,
‘அய்யா! அப்படித் தொடங்குவதற்குப் பதில், ‘ஏழைகளுக்கும் படிப்பு எட்டும் வகையில், பள்ளி நிர்வாக மாற்றம் தேவைப்படுவதால்’ என்று அறிக்கையைத் தொடங்கினால் என்ன? என்று குறுக்கிட்டேன்.
‘இருக்கட்டும் யோசிப்போம்’ என்றார், இயக்குநர்.
‘எடுப்பை ஒட்டியே தொடர்பு இருக்கவேண்டும். எனவே, எடுப்பு எரிச்சலைக் கிளப்புவதாக இருக்கவேண்டாம்’ என்றேன்.
‘முதல் அமைச்சர் சொன்ன சொற்கள் இவை; எனவே, அப்படியே தொடங்குவோம்’ என்றார்.
‘அறையில் பேச்சுவாக்கில், சொன்ன பாணியிலேயே தொடங்குவது நல்லதல்ல! என்னைத் தயவு செய்து தவறாக எண்ணிவிடாதீர்கள்.