54. இப்படியும் ஒரு சோதனையா?
இறை வணக்கத்தோடு வடஆற்காடு கல்வி மாநாடு தொடங்கிற்று. வரவேற்பு உரைக்குப் பின்னர், தலைவர் முன்னுரை கூறினார்.
அடுத்த ஒருவர், சுருக்கமாகப் பேசியபின், மாநாட்டுத் தலைவர் என்னைப் பேச அழைத்தார்.
நான் எழுந்து ஒலி பெருக்கியிடம் சென்றேன். நெஞ்சுபட படத்தது: உடம்பெல்லாம் வியர்த்தது.
‘'வேண்டிய நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று இராசாசி கூறியது காதில் வீழ்ந்தது. எனக்குப் பதற்றம் அதிகம் ஆயிற்று.
‘இப்படியும் ஒரு சோதனையா?’ என்ற ஏக்கத்தோடு, ஒலி பெருக்கி முன் சென்று நின்றேன்.
மாநாட்டில் பங்கு கொள்ளப் போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தவர்களின் பெயர்களைச் சொல்லி விளிப்பதில் இரு மணித் துளிகள் நகர்ந்தன.
ஒரளவு பதற்றம் தணிந்தது. எப்படியோ பேசினேன். சில மணித் துளிகள் அல்ல; இருபத்தைந்து மணித்துளிகள்போல் பேசினேன்.
கடமையை நிறைவேற்றினேன்.
என்ன பேசினேன்?
‘அண்மையில் புதியதோர் . மாற்றி அமைக்கப்பட்ட தொடக்கக் கல்வித் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
‘இக் கல்விச் சோதனை, பல வட்டாராங்களில் அச்சத்தையும் பகை உணர்ச்சியையும் வளர்த்து உள்ளது.
‘இது பெரும் அரசியல் விவகாரமாகி விட்டது. ‘அரசியல் காட்டாற்று வெள்ளத்தில் கல்வித்துறையைச் சேர்ந்த நாம் சிக்கிக் கொள்ளக்கூடாது; கட்சி, பிரதிகட்சியாளராக மாறிவிடக்கூடாது.
‘பொது ஊழியர்கள் என்ற முறையில் நமக்கு உயிர்நாடியான உணர்வு கட்டுப்பாட்டு உணர்வே ஆகும்.