நிமிர்ந்து நில் துணிந்து செல் 63 7. நிமிர்ந்து நில் நாம் வாழும் பூலோகத்தில் மட்டும் ஜீவ கோடிகள் எண்ணிக்கையில் சிந்தைக்கும் எட்டாது என்பார்கள். அத்தனை ஜீவராசிகளிலும் அற்புதமான பெருமையைப் பெற்று இருப்பது மனித இனமே. மனித இனத்தின் மகிமையை எழுதினால், எழுதித் தீராது. பேசினாலும் காலம் போதாது. ஆமாம். உலகை ஆளப்பிறந்த இனம். அனுபவிக்கப் பிறந்த இனம் மனித இனந்தான். அழகாக மெருகேறிய உடலமைப்பு வளர்கின்ற பலமிகுந்த வாளிப்பான உறுப்புக்கள். சிந்தனைக்கு இதயம். சொல்வதற்குப் பேச்சு. சிரிப்பதற்கு மனது. இப்படி மனிதரது பெருமைக்குக் கட்டியம் கூறும் பற்பல அமைப்புக்கள் மக்களிடம் மண்டியிட்டுக் கிடக்கின்றன. இவற்றை எல்லாம் மனிதர்கள் பெருமையாக நினைப்பதில்லை. இலவசமாகக் கிடைத்ததல்லவா இந்த மனித தேகம். இந்த மானிடப் பிறப்பு. அதனால்தான் மனித தேகத்தை மக்கள் எல்லோருமே ஏளனமாக எண்ணிக கொண்டிருக்கிறார்கள். காசு கொடுக்காமல் பெறுகிற எந்தப் பொருளுக்கும் இந்த மனிதர்கள் மரியாதை கொடுப்பதில்லை. ஏனென்றால் அவர்கள் காசுக்கும், பணத்திற்குந்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். 'காசேதான் கடவுள்' என்று பாடுகிறார்கள்.