பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 நிலைபெற்ற நினைவுகள் கிராம ஊழியன் வழக்கம்போல் மாதம் இருமுறை வெளிவந்து கொண்டிருந்தது. அ.வெ.ர. கிருஷ்ணசாமி ரெட்டியார் நிர்வாக ஆசிரியர், வல்லிக்கண்ணன் ஆசிரியர் என்று அறிவிக்கப்பட்டது. கும்பகோணம் எழுத்தாளர்கள் எழுதவில்லை. புதிய எழுத்தாளர்கள் சிலர் எழுதலானார்கள். ராசிபுரம் தனுஷ்கோடி, தி.க, சிவசங்கரன், என் அண்ணா அசோகன் (ரா.சு.கோமதி நாயகம்), சுப.நாராயணன், திருச்சி வானொலியில் பணிபுரிந்த சிட்டி, குகன், கே.பி.கணபதி (மாறன்) என்று அநேகரின் எழுத்துக்கள் ஊழியனுக்கு உயிரூட்டின. திருச்சி ரேடியோ நிலைய உதவி இயக்குநர் கு.ப. ரங்காச்சாரி, பராங்குசம் என்ற பெயரில், புதுமையான சிறுகதைகள் எழுதி உதவினார். நான் அதிகம் எழுத வேண்டியிருந்தது. வெவ்வேறு பெயர்களில் வித்தியாசமான நடைகளில், கதை கட்டுரை கவிதை நாடகம் என்று எழுதிக்கொண்டிருந்தேன். பாரதியின் வசனகவிதைப் படைப்புகளான ‘காட்சிகள்’ பாணியில், “பாரதி அடிச்சுவட்டில்’ எனும் தலைப்பில், இளவல் என்ற புனைபெயரில் நான் இதழ்தோறும் எழுதினேன். இவை மிகுந்த பாராட்டுதல்களைப் பெற்றுத் தந்தன. அதே சமயம் அதிகமான கண்டனங்களையும் குறைகடறல்களையும் பரிகசிப்புகளையும் எதிர்கொண்டன. புத்தக மதிப்புரை ஊழியனின் சிறப்பான அம்சமாக விளங்கியது. அவற்றை நானே எழுதினேன். எனவே மதிப்புரைக்காகப் பல்வேறு பதிப்பகங்களும் புதிய வெளியீடுகளை அனுப்பிக் கொண்டிருந்தன. தி.க.சி, துருவன் என்ற பெயரில், திரைப்பட விமர்சனங்களை குடும் சுவையுமாக எழுதிவந்தார். அவ்வப்போது கவிதைகளும் எழுதினார். முச்சந்தி என்ற பகுதியில் பிள்ளையார் விவாதத்துக்கு உரிய பிரச்சினைகளை அலசினார். பிள்ளையார் என்பது என் புனைபெயர்களில் ஒன்று. ரெட்டியார், கண்ணன், அ.வெ.ர.கி, தேவராய பூபதி என்ற பெயர்களில் அவெர. கிருஷ்ணசாமி எழுதினார். கிராம ஊழியன் இதழ்கள் முக்கியமான எழுத்தாளர்கள், பத்திரிகைக்காரர்கள், புத்தக வெளியீட்டாளர்கள் முதலியோருக்கு இலவசமாக அனுப்பப்பட்டன. அதனால் எங்கள் எழுத்துக்கள் மிகப் பலரது கவனிப்புக்கும் விமர்சனத்துக்கும் உரியனவாயின.