பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் : 21 முக்கூடற்பள்ளு பற்றிப் பேசினேன். மற்றொரு இளைஞரும் உரையாற்றினார். பிறகு ரா.பி.சேதுப்பிள்ளை சொல்மாரி பொழிந்தார். சங்கத்தின் ஆண்டுவிழா அழைப்பிதழ் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்திருந்தது. அதைக் குறிப்பிட்டுச் சொன்னார். 'இந்தச் சங்கத்தைச் சேர்ந்த இளைஞர்களின் தமிழ்ப்பற்று பாராட்டப்பட வேண்டியது ஆகும். பேச்செல்லாம் தமிழினிலே பேசுங்கள் என்று கேட்டுக்கொள்கிறார்கள். அத்துடன் நிறுத்தி விடாமல் ஏச்சுக்களைக் கூடத் தமிழிலே ஏசுங்கள் என்று வேண்டுதல் விடுக்கிறார்கள். தமிழ் நாட்டில் தமிழ்மக்கள் இடியட், ஃபூல், ராஸ்கல் என்றெல்லாம் ஆங்கிலத்தில் ஏசுவது இயல்பாக இருக்கிறது. அப்படி ஏசாதீர்கள்; தமிழ் மொழியிலேயே திட்டுங்கள் என்று நெல்லை வாலிபர்கள் கோருகிறார்கள். முற்காலத்தில் சிவனடியார் ஒருவர் பாடினார், வைதாலும் தமிழினிலே வையுங்கள். வாழ்த்தெனக் கொண்டிடுவேன் என்றார். அந்த பக்தரின் பண்பும் தமிழ்ப்பற்றும், இவர்களுக்கு இருக்கிறது. இது சாதாரணமானது அல்ல என்று அவர் மகிழ்ச்சியோடு பாராட்டினார். தமிழ் உணர்வு, தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவது குறித்து சேதுப்பிள்ளை விரிவாகப் பேசினார். அவர் கூறிய கருத்துகள் என் மனசில் ஆழப்பதிந்து நிலைத்து விட்டன. அருவி எனும் அழகான சொல் இருக்கிறது. ஆனால் இப்போதெல்லாம் அருவிக்கு பதிலாக நீர்வீழ்ச்சி என்று எழுதுகிறார்கள். ஆங்கிலத்தில் வாட்டர்ஃபால்ஸ் எனக் கூறப்படுவதைப் பின்பற்றி தமிழ் நாட்டினரும், அதன் மொழிபெயர்ப்பாக நீர்வீழ்ச்சி எனக் குறிப்பிடுகிறார்கள். அருவி எனும் அழகான சொல்லை ஒதுக்கிவிட்டு, நீர்வீழ்ச்சி என்று ஏன் அமங்கலமாகக் கூற வேண்டும் என்று சேதுப்பிள்ளை கேட்டார். அதே போல காவிரி என்ற இனிய சொல் வழக்கத்தில் காவேரி என்று திரிந்துள்ளது. பேச்சிலும் எழுத்திலும் அப்படியே வழங்கப்படுகிறது. காவேரி என்பது பொருளற்றது. காவிரி என்பது தோப்புகள் மரங்கள் அடர்ந்த கரைகளினூடே விரிந்து செல்கிற ஆற்றைக் குறிப்பிடும் சொல். காவேரி என்றால்? மழைநாட்களில் காவிரியில் செம்மண் நிறத்தில் நீர் ஒடும். அதில் குளித்துக் கரை ஏறுகிறவர்களின் வெள்ளை வேட்டி காவியேறி நிறம் மாறிக் காணப்படும், அதைக் குறிக்கத் தான் காவேரி என்று சொல்கிறார்கள் போலும் என்று சேதுப்பிள்ளை குறிப்பிட்டார்.