பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ஜ் 37 எனினும், என் உள்ளத்தில் அமைதி இல்லை. எழுத்துத் துறையில் வளர்ந்து முன்னேறுவதற்கு நான் வீட்டை விட்டு வெளியேற வேண்டியது அவசியமாகும் என்ற எண்ணம் என்னுள் உறுத்திக் கொண்டேயிருந்தது. வெளியுலகில் சென்று முயற்சிக்க வேண்டும் எனும் நினைப்பு பேருருவம் பெற்று வந்தது. எங்கே போவது? போய் என்ன செய்வது? இப்பிரச்சினைகள் தலைதூக்கவில்லை. வீட்டை விட்டு வெளியேறி ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணமே வளர்ந்தது. எங்கே போகலாம்? சென்னைக்கே போகலாம். போவதற்குப் பணம்? நடந்தே போகலாம். இப்படி மனம் தர்க்கித்துக் கொண்டிருந்தது. புத்தகங்களில் படித்திருந்த சில வரலாற்று நிகழ்வுகள் என்னுள் வேலை செய்தன. பெயர் பெற்ற ஆங்கில நாவலாசிரியரான (எழுத்தாளர். கவிஞர் ஆலிவர் கோல்ட்ஸ்மித் நடந்து நடந்தே ஐரோப்பா முழுவதும் பயணம் செய்தான். ரஷ்ய எழுத்தாளன் மாக்சிம் கார்க்கி நடந்து நடந்தே ரஷ்யாவின் நீள அகலங்களைக் கண்டறிந்தான். இத்தாலிய சர்வாதிகாரியாக வளர்ந்து விட்ட பெனிட்டோ முசோலினி, ஆரம்பகாலத்தில், பையில் மூன்றே மூன்று (இத்தாலிய) காசுகளோடு, தொலைவில் இருந்த கிராமத்திலிருந்து புறப்பட்டு நடந்தே ரோம் நகரை அடைந்தான். நடப்பது ஒன்றும் சிரமமான காரியம் இல்லை என்றது மனம். தனக்கு சாதகமாக மனம் கணக்கிட்டது. திருநெல்வேலியில் இருந்து சென்னை 400 மைல் தூரம். தினசரி 30 மைல்கள் நடக்கலாம். அப்படி நடந்தால் 14 நாள்களில் சென்னை போய்ச் சேரலாம். எப்படியும் 15 நாட்களில் போய் விடலாம் என்று அது சந்தோஷப்பட்டது. தொடர்ந்து தினசரி 30 மைல்கள் நடக்க முடியுமா? கையில் பணம் எதுவுமின்றி நடக்கிறபோது சாப்பாட்டுக்கு என்ன செய்வது? போதுமான உணவு இல்லாமல் எத்தனை மைல்கள் நடக்க முடியும்? எத்தனை நாள்கள் நடக்க இயலும்? இக்கேள்விகளை மனசே கேட்டுக் கொண்டது. ஆனால், இளமையும் கனவு வேகமும் லட்சிய வெறியும் கூட அதெல்லாம் நடந்து போயிடலாம் என்று தைரியம் தந்தன. என்றைக்குப் புறப்படுவது? என்னென்ன எடுத்துப் போவது வீட்டில் யாருக்கும் தெரியாமல் எப்படிக் கிளம்பிப் போவது? இந்த நினைப்புகளை எண்ணி எண்ணிப் பொழுது போக்கியது மனம்.