பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

டாக்டர். எஸ் நவராஜ் செல்லையா


பிரச்சனை மிகுந்த தலைப்பு என்று எனக்கும் இப்பொழுதுதான் புரிகிறது.

இந்த உடலை அப்படிதான். இறைவனால் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய ரகசியங்களையும் அதிசயங்களையும் கொண்டதாக விளங்கும் இந்த உடலைப்பற்றி, ஆயிரமாயிரம் விஞ்ஞானிகள் பன்னெடுங்காலமாக முயற்சித்துக் கொண்டுதான் வருகின்றார்கள். தோல்விகளைத் தோள்களில் சுமந்து கொண்டுதான் அலைகின்றார்கள் கண்டு பிடிக்க இயலாமல்.

தெரிவது போலத் தோன்றி, சீதை பார்த்த மாயமான் போல மறைந்தும் பதுங்கியும் ஜாலங்கள் காட்டுகின்ற சக்தி படைத்ததுதான் நமது தேகம். இந்த உடலுக்கு அவ்வப்போது ஏற்படுகின்ற பெயர்களைப் பாருங்கள்.

மனிதன் என்று அழைக்கிறோம். அந்தப் பெயருக்குள்ளே பிரிந்து நிற்கும் உபப்பெயர்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

மனித உடல் என்று கூறும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதில் கால் குறைந்தவனை நொண்டி என்கிறோம். காது கேளாதவனை செவிடன் என்கிறோம். பேச முடியாதவனை ஊமை என்கிறோம். மனநலம் குறைந்தவனை பைத்தியம் என்கிறோம். உடல் நலம் குறைந்தவனை நோயாளி என்கிறோம். சுவாசிக்கும் நிலையை இழந்தவனை பிணம் என்கிறோம்.

உடலுக்கான பெயர்களில் தான் மாற்றம் என்றால், உடலுக்குள்ளே எழும் மாற்றங்களை வைத்துக் கொண்டு என்னென்ன பெயர்களை வைத்துக்கொள்கிறது இந்த உடல்? செய்யும் தொழிலை வைத்துக்கொண்டு பெயர்களைப் பெறுவது நமக்குத் தெரியும் வைத்தியன், வாணிகன், வாத்தியார், விஞ்ஞானி என்பது போல.