பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் இளமையாக வாழலாம்

29


 கூட்டங் கூட்டமாக மீன்கள் வசிக்கின்றன. நீந்தி விளையாடுகின்றன. அது மீன்களின் இயற்கைப் பிடிப்பு, யானைகள் மற்றும் காட்டு விலங்குகள் கூட்டங் கூட்டமாகக் கூடிவாழ்கின்றன. மகிழ்கின்றன. அது இயற்கைப் பிணைப்பு, ஆனால், மனிதர் வாழ்க்கை அப்படியல்லவே!

மனிதர்கள் கூடித்தான் வாழ்கின்றார்கள். கூட்டமாகத் தான் வாழ்கின்றார்கள். சமுதாயம், கலாசாரம், நாடு மொழி என்ற கூட்டுக்குள் தான் வாழ்கின்றனர். அவர்கள் கூட்டமாக இருந்தாலும், மனதாலும் வயதாலும் தனித்தனி மனிதர்களாகவே தான் வாழ்கின்றார்கள். அதாவது எண்ணெய்யும் தண்ணிரும் போல, ஒட்டியும் ஒட்டாமலும் வாழ்கின்றார்கள்.

கூடிவாழ்வது மகிழ்வது எல்லாம் சிறுவர்களாக இருக்கும் பொழுதுதான். இந்த ஒற்றுமைப் பண்பும் தன்னலமில்லாத அன்பும், அடிப்படையாக மனிதப் பண்பாட்டோடு இருப்பவை, அகலமும் திண்மையும் மிகுந்த ஒரு பரந்த மேடையாக சிறுவர்களின் அன்பும் பண்பும் இருக்கின்றன.

ஆனால், வயது ஆக ஆக, இந்த அன்பும், பண்பும் குறுகிக் கொண்டேவருகின்றன. அடிப்படையில் அகலமான பரப்பாக அமைந்திருக்கும் மேடை, போகப்போக குறுகிக் கொண்டே வருவதுபோல, மனித மனத்தின் விசாலமும் பெருந்தன்மையும் குறுகிக் கொண்டே வந்து, சுயநலம் என்னும் துரும்புத் தூணாக மாறிப் போகின்றது.

வயதான பிறகு ஏற்படுகின்ற இத்தகைய மனமாற்றம் எப்படி ஏற்படுகின்றது? நலிவு படுத்தும் நோய்களால் என்கிறார்கள். கூடவே இருந்து கொண்டு கொடுமைப்படுத்துகின்ற நோய்களால், மக்கள் உடலால் தளர்ந்து போகின்றார்கள். அதனால் மனத்தாலும் மாற்றம் பெற்றுக் கொள்கிறார்கள். அப்படியென்றால் முதுமையை எப்படி சந்திப்பது? அதனிடமிருந்து எப்படி சாதிப்பது?