நீங்களும் இளமையாக வாழலாம்
69
வருவதற்கேற்ப வைத்தியம் செய்து கொள்வதுதான் வாழ்வை வருத்தமில்லாமல் அனுபவித்து வாழ வழி வகுக்கும். வருகிறதே, வந்துவிட்டதே என்று வருத்தப்படுவது. மகிழ்ச்சியை அழிப்பதுடன், சுவையற்ற சாரமற்ற வாழ்வு வாழ வைத்துவிடும்.
(ஆ) கேளாத காதுகள்:
காதுகளின் செயல் அமைப்பு, கண்களைப் போல அல்ல.
வயதான காலத்தில் உள்ளவர்கள் பலருக்கு தெளிவாகக் காது கேட்பது உண்டு. சிறியவர்கள் பலர் செவிடர்களாக இருப்பதையும் நாம் கண்கூடாகக் காண்கிறோம்.
காதுகேளாமல் போவதற்குரிய காரணங்கள் பல உண்டு. நடுக்காதில் உள்ள நுண்ணிய காதெலும்புகளை இணைக்கின்ற தசைநார்கள் நெகிழ்ச்சித் தன்மையை இழந்து, விறைப்பாகிப் போய்விடும்போது, காதுகள் கேட்கும் சக்தியை இழந்துவிடுகின்றன.
இந்த நுண்ணிய காது எலும்புகள், வெளியிலிருந்து காற்றுடன் வரும் செய்தி அலைகளை ஏந்தி, காதிலே உள்ள செவிப்பறையில் மோதவிடுகிறது.
இத்தகைய செய்தி கடத்தும் செயல்களில் ஈடுபடுகின்ற எலும்புகளும், அவற்றை இணைக்கின்ற தசைநார்களும் நெகிழ்ச்சியை இழப்பதானது, நோயினால் ஏற்படவும் கூடும். நோயின் கொடுமையானது எலும்புகளை பாதித்து விடுகிறது. சிறுசிறு கோளாறுகளும் இவற்றை செயலிழக்கச் செய்து விடுகின்றன.
தொண்டைக்குள் ஏற்படுகின்ற கடுமையான வியாதியும், காதுகேளாமல் செய்து விடுகிறது.